

மாட்ரிட்: மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் நாட்டின் சியூட்டா எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிகழ்வு, நெரிசல், கடலில் மூழ்கியது முதலான ரணங்களால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அமைந்துள்ள ஸ்பெயினும், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ நாடும் அருகருகே அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான மிகக் குறைந்த தூரமே, அதாவது 13 கிலோ மீட்டர் இடைவெளி மட்டும்தான். ஸ்பெயினில் உள்ள சியூட்டா தான் மொராக்கோவுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதி ஆகும்.
முஸ்லிம் நாடான மொராக்காவில் வறுமை, வேலையின்மை போன்றவை காரணாக ஏராளமானோர் புலம்பெயர்ந்து ஸ்பெயினுக்குள் வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக மொராக்கோ நாட்டு மக்கள் சட்டவிரோதமாக ஸ்பெயினுக்குள் புலம் பெயர்ந்து வருகின்றனர்.
மொராக்கோ மக்களை உடனடியாக திருப்பி அனுப்பக் கூடாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஸ்பெயின் அரசு உள்ளது.
இதனிடையே, மொராக்கோ நாட்டின் ஃபனிடெக், பெலியூன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 70,000 பேர் நேற்று தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயின் எல்லையான சியூட்டாவை நோக்கி ஒரே நாளில் குவிந்துவிட்டனர்.
ஸ்பெயின் நாட்டு உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு ஒரே நாளில் ஏராளமான மக்கள் சியூட்டா வழியாக ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றனர். போலீஸாரின் கட்டுப்பாட்டையும் மீறி அவர்கள் கடல்வழியாக நுழைந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களையும், போலீஸாரைம் அதிக அளவில் குவித்திருந்தது.
ஸ்பெயின் எல்லைக்குள் வரும் மொராக்கோ மக்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து போலீஸார் விரட்ட முயன்றனர். இருந்தபோதும் 64,000-க்கும் அதிகமானோர் சியூட்டா எல்லையைக் கடந்து ஸ்பெயினுக்குள் சென்றுவிட்டதாக ஸ்பெயின் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு, நெரிசல், கடல் நீரில் மூழ்கியது போன்ற காரணங்களால் மொராக்கோவைச் சேர்ந்த 34 பேர் உயிரிழந்து விட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை போலீஸார் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், மொராக்கோவில் இருந்து சியூட்டா வழியாக ஸ்பெயினுக்குள் நுழைவதைத் தடுக்க ஸ்பெயின் அரசு தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சியூட்டா பகுதியை நோக்கி வரும் பொதுமக்களைத் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.