Published : 11 Feb 2015 12:52 PM
Last Updated : 11 Feb 2015 12:52 PM
ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிட்னியில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின்போது இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 24 மற்றும் 25 வயதுமிக்க இளைஞர்கள் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து ஃபேர்ஃபீல்ட் என்ற இடத்தில் தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட வீடியோ பதிவு, கத்தி மற்றும் ஐ.எஸ். அமைப்பின் கொடி ஆகியவற்றை நியூ சவுத் வேல்ஸ் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் ஆஸ்திரேலியாவில் ஐ.எஸ். அமைப்பின் சார்பில் தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டு வந்தது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பெயர் குறிப்பிடப்படாத இருவரின் மீதும் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் காவல் ஆணையர் கேத் பெர்ன் வரும்போது, "கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் தன்மையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது உறுதியானது. கைது நடவடிக்கை நடக்காமல் இருந்திருந்தால் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டிருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.
கைது செய்யப்பட்ட நபரில் ஒருவர், கைப்பற்றப்பட்ட வீடியோவில் தாக்குதல் குறித்து பேசியுள்ளது தெளிவாக பதிவாகியுள்ளது. கத்தி போன்ற ஆயுதங்களால் இவர்கள் வழக்கமாக ஐ.எஸ். அமைப்பு நடத்திவரும் படுகொலை போன்ற சம்பவங்களை நடத்த உத்தேசித்தார்களா என்பது தெரியவில்லை. விசாரணையில் மேலும் தகவல்கள் கிடைக்கலாம் என்று நினைக்கிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT