Published : 24 Feb 2015 10:31 AM
Last Updated : 24 Feb 2015 10:31 AM
வங்கதேசத்தில் பத்மா நதியில் சென்றுகொண்டிருந்த ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 70 பேர் பலியாகியுள்ளனர். அந்த விபத்தில் நதியில் மூழ்கிய மேலும் பலர் தேடப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தெளலத்தியா என்ற இடத்தில் இருந்து படூரியா எனும் இடம் நோக்கி படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் சுமார் 200க்கும் அதிகமான பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் படகு நதியில் சென்று கொண்டிருந்த இன்னொரு விசைப்படகின் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறிய அந்தப் படகு, கவிழ்ந்தது. அதில் பயணித்தவர்களும் நதியில் மூழ்கினார்கள்.
தகவல் அறிந்து வந்த நீர்மூழ்கி வீரர்கள் ஞாயிறு இரவு முழுவதும் தேடி சுமார் 70 உடல்களை மீட்டனர். அவற்றில் இதுவரை 63 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மணிகஞ்ச் மாவட்ட நிர்வாக இணை ஆணையர் ரஷீதா பிர்தெளஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மூழ்கிய படகை நாங்கள் மீட்டுவிட்டோம். ஆகவே இத்துடன் முதன்மையான மீட்புப் பணிகள் முடிவடைகின்றன.
ஆனால் அந்தப் படகில் பயணித்தவர்களின் உடல்களைத் தேடும் பணி அடுத்த சில நாட்களுக்குத் தொடரும்.
மேலும் இதுவரை சுமார் 100 பயணிகளை உயிருடன் மீட்டுள்ளோம். எனவே, இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT