Published : 02 Feb 2015 10:49 AM
Last Updated : 02 Feb 2015 10:49 AM
பூமியை கண்காணிக்கும் செயற்கைக் கோளை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) நேற்று வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. இது புயல், வறட்சி உள்ளிட்ட தகவலை முன்கூட்டியே துல்லியமாக தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வந்தென்பெர்க் விமானப்படை தளத்திலிருந்து, நாசா சார்பில் ‘தி டெல்டா-2’ ராக்கெட் நேற்று காலை விண்ணில் ஏவப்பட்டது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் இதிலிருந்த ‘சாயில் மாய்ஸ்சர் ஆக்டிவ் பாஸிவ்’ (எஸ்எம்ஏபி) என்ற செயற்கைக்கோள் திட்டமிட்டபடி தனியாக பிரிந்தது. பின்னர் அதன் சோலார் பேனல்கள் விரிந்து மின்சாரத்தை தயாரிக்க தொடங்கியது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் இந்த செயற்கைக்கோள், பூமிக்கடியில் உள்ள தண்ணீர் வளம் பற்றிய தகவலை வழங்கும். இதன்மூலம் வறட்சி தொடர்பான விவரங்களை விவசாயிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க முடியும்.
மேலும், புயல் பற்றிய துல்லியமான தகவலையும் இது வழங்கும். இதன்மூலம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த முடியும். இப்போது கணினி மாதிரி முறையில் புயல் மற்றும் வறட்சி குறித்த முன்னறிவிப்பை மத்திய அரசு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 3 சிறிய வகை ஆராய்ச்சி செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது. 100-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சிறிய வகை செயற்கைக்கோள்களை வடிவமைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT