

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் (மார்ச்) இலங்கை வருவதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. மார்ச் 13-ம் தேதி பிரதமர் மோடி இலங்கை வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுகாதார அமைச்சர் ரஜித சேனரத்னே இதனை உறுதி செய்துள்ளார். மார்ச் 13 முதல் மூன்று நாட்கள் மோடி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
25 ஆண்டுகளுக்குப் பின்...
"25 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு வருகைதரும் முதல் பிரதமர் நரேந்திர மோடி. மார்ச் 13 முதல் மூன்று நாட்கள் மோடி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்வார். 3 நாட்கள் பயணத்தில் இலங்கை அரசுடன் பல முக்கிய பேச்சுவார்த்தையில் மோடி ஈடுபடுவார்" இவ்வாறு ரஜித சேனரத்ன கூறினார்.
வடக்கு மாகாணத்துக்குப் பயணம்?
இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்துக்கு மோடி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருநாட்டு நல்லுறவு:
கடந்த 18-ம் தேதி இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, அதிபரான பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். தனது இந்தியப் பயணத்தால் இருநாட்டு நல்லுறவும் மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும், பிரதமர் மோடியின் வரவை தான் எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.