Last Updated : 24 Feb, 2015 10:35 AM

 

Published : 24 Feb 2015 10:35 AM
Last Updated : 24 Feb 2015 10:35 AM

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 6

வஹாப் ஆன்மிக குருவாகவும் சவுத் ஆட்சியாளருமாக இணைந்து 19-ம் நூற்றாண்டில் உருவாக்கிய அரசின் எல்லை கிட்டத்தட்ட அரேபிய தீபகற்பம் முழுவதும் பரவியது (மெக்கா, மெதினா உட்பட). திரியாவை தலைமையிடமாக கொண்ட சவுத் ஆட்சியாளர்களின் புகழ் ஒட்டாமன் சாம்ராஜ்யத்துக்கு நெருடல் அளித்தது. ஒட்டாமனின் படை திரியா நகரில் நுழைந்து அந்த நகரை நிர்மூலமாக்கியது.

அங்குள்ள பேரீச்சைத் தாவரங் களை வேரோடு சாய்த்தது. துப் பாக்கி குண்டுகளால் அங்குள்ள கட்டடங்களைத் துளைத்து துவம்சம் செய்தது. கிணறுகளைத் தூர்த்தது. அதாவது மக்கள் வசிக்கவே முடியாதபடிக்கு அந்த நகரை ஆக்கியது.

சில வருடங்கள்தான். மறுபடி யும் கிளர்ந்தெழுந்தது சவுத் ஆட்சி. ரியாத் அதன் தலைநக ராக மாறியது. இது திரியாவிலி ருந்து சுமார் இருபது மைல்கள் தள்ளியிருந்தது. சுமார் பதினோரு ஆண்டுகள் ஆட்சி செய்தார் துர்கி பின் அப்துல்லா அல் சவுத். ஒட்டாமன் ஆட்சியில் இழந்த பகுதி களில் பெரும்பாலானவற்றை மீட்டார்.

மீண்டும் அமைதிக்கு பங்கம். 1865-ல் ஒட்டாமன் சாம் ராஜ்யம் புதிய வலிமையுடன் எழுந்தது. சவுதி நாட்டின் துறை முகங்களைக் கைப்பற்றியது. சவுதி அரசை நீக்க முயற்சி செய்தது.

அப்போதைய சவுதி மன்னர் அப்துல் ரஹ்மான் பின் ஃபைசல் அல் சவுத் என்பவர் கிழக்கு அரேபியாவின் பாலைவனப் பிரதேசங்களில் வாழ்ந்த பெடோயின் இன மக்களிடம் தஞ்சம் கேட்டார்.

தன் குடும்பத்தோடு அந்தப் பகுதிக்குச் சென்ற மன்னர் 1902 வரை அங்கேயே தங்கினார். அதாவது சுமார் பத்து வருடங்களுக்கு. அப்போது மன்னரின் மகன் அப்துல் அஜீஸ் அவருடன் இருந்தார்.

இழந்த தங்களது ராஜ்ஜியத்தை மீட்டே ஆக வேண்டும் என்ற தீர்மானத்துடன் மனதில் மிகுந்த தைரியத்துடன் வெறும் நாற்பதே தொண்டர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு நள்ளிரவில் ரியாத் நகருக்குள் நுழைந்தார் அப்துல் அஜீஸ்.

எப்படி என்ற விவரங்கள் சரியாகப் புலப்படவில்லை. ஆனால் மெக்கா மெதினா உட்பட பல பகுதிகளைத் தன் கைவசம் கொண்டு வந்தார். ஆங்காங்கே தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்த சமூகங்களை இணைத்து தனக்கு ஆதரவாக ஆக்கிக் கொண்டனர்.

செப்டம்பர் 23, 1932 அன்று சவுதி அரேபியா என்ற பெயரில் நாடு உருவானது. அதன் தேசிய மொழி அரபி, அரசியலமைப்பு என்பது குர்ஆன்தான்.

ஒருவரின் பெயர் ஒரு நாட்டிற்கு வைக்கப் படுவது அபூர்வம். அது சவுதி அரேபியாவில் நிகழ்ந்தது.

மன்னர் சவுத் அடுத்தடுத்து செயல்பட்டு சவுதி அரேபியாவின் எல்லைகளை மேலும் மேலும் விரிவாக்கினார். முதலில் ரியாத் அவர் வசம் வந்தது. ஷெரீப் உசேன் அலியையும் தோற்கடித்தார். உரு வானது நவீன சவுதி அரேபியா.

(ஷெரீப் உசேன் அலி குறித்து சில விவரங்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டாமன் சாம்ராஜ்ஜியம் ஆட்டம் காணத் தொடங்கியது. இதற்கு ஒரு முக்கிய காரணம் அரேபியர் களின் புரட்சி. இதைத் தொடங்கியவர் ஷெரீப் உசேன் அலி என்பவர். ஒட்டாமன் சாம்ராஜ்ஜியத்திலிருந்து அரபு நாடுகள் முழுமையான சுதந்திரம் பெற வேண்டுமென்பதுதான் அந்தப் புரட்சியின் நோக்கம். இதற்கு அடுத்த கட்டமாக சிதறிக் கிடந்த அரபுப் பகுதிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கமும் இருந்தது.

வந்தது முதலாம் உலகப் போர். பிரிட்டன் மற்றும் பிரான்ஸுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார் ஷெரீப் உசேன் அலி. இதன்படி உலகப் போரில் இந்த இரு நாடுகளுக்கு அரேபியர்கள் ஆதரவு இருக்கும். ஆனால் இதற்கு பதிலாக ஒட்டாமன் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராகச் செயல்பட்டு அரபு நாடுகளுக்கு விடுதலை வாங்கித் தரவேண்டும். அரேபியர்களுக்கு ஆதரவாகவே நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்றன).

சவுதி அரேபியாவில் நிகழ்ந்த அடுத்த மாபெரும் புரட்சி என்பது 1930-களில் அங்கு கண்டெடுக்கப் பட்ட பெட்ரோலியக் கிணறுகள். இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம். ஆனால் ஒன்று, சவுதி அரேபியா மட்டுமல்ல, அந்த பகுதியிலுள்ள எல்லா நாடுகளுமே பெட்ரோலிய வளத்தால் பணம் கொழிக்கத் தொடங்கின. (இந்த விஷயத்தில் பரிதாபமாக விளங்கிய விதிவிலக்கு ஏமன் மட்டுமே).

சவுதி அரேபியாவின் லேட்டஸ்ட் மூன்று மன்னர்களைப் பார்ப்போம்.

1982 முதல் 2005 வரை அங்கு மன்னராக இருந்தவர் பஹத் அப்துல் அஜீஸ். இளவரசராக இருந்தபோதே ஐ.நா. சபையின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்காக சான் பிரான்ஸிஸ் கோவிற்குச் சென்றார். பின்னர் சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரானபோது ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடி சூடும் விழாவிற்குச் சென்றார். 1953 இறுதியில் சவுதி அரேபியாவின் கல்வி அமைச்சரானார். அந்த நாட்டின் கல்வித் துறை அமைச்சர் நியமிக்கப் பட்டது அப்போதுதான்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x