Published : 11 Feb 2015 10:36 AM
Last Updated : 11 Feb 2015 10:36 AM
பிரிட்டிஷ் பிணைக் கைதி ஒருவரின் புதிய வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இந்த முறை கொலை மிரட்டல் விடுக்கவில்லை, அதற்கு மாறாக அந்த பிணைக் கைதி மூலம் தங்கள் அமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் ஜான் கேன்ட்லி கடந்த 2012-ம் ஆண்டில் சிரியாவின் அலெப்போ நகரில் செய்தி சேகரித்தபோது ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரது வீடியோவைதான் தீவிரவாதிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
12 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் ஜான் கேண்டி ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அப் பகுதி செய்திகளை விவரிக்கிறார்.
கோபெனி, மோசூல் நகரங்களில் அமெரிக்க கூட்டுப் படைகளின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் குறித்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வீரதீரம் குறித்தும் ஜான் கேண்டி வீடியோவில் நிதானமாக விளக்கிக் கூறுகிறார்.
ஒரு பள்ளியின் முன்பு நின்று பேசும் ஜான், இந்தப் பள்ளியில் இருந்துதான் அடுத்த தலைமுறை ஜிகாதிகள் உருவாகிறார்கள் என்று கூறுகிறார்.
பின்னர் ஆளில்லா உளவு விமானம் வீடியோவில் காட்டப்படுகிறது. அந்த விமானம் குறித்து ஜான் கூறும்போது, எத்தனை கண்கள் கண்காணித்தாலும், கொத்து கொத்தாக குண்டுகளை வீசி னாலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை யாராலும் அழிக்க முடியாது என்று கூறுகிறார்.
ஷரியத் சட்டங்கள் குறித்தும் தீவிரவாதிகளின் வீரம் குறித்தும் வீடியோவில் இடைவிடாது ஜான் கேண்டி விவரிக்கிறார்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்க, பிரிட்டிஷ் பிணைக் கைதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டபோது ஜான் கேண்டியும் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டது. இந்நிலையில் அவரது வீடியோவை தீவிரவாதிகள் இ்பபோது வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு இதுபோல் பல்வேறு வீடியோக்களில் ஜான் கேண்டி தோன்றியுள்ளார். ஆனால் இந்த வீடியோவின் இறுதியில் அவர் பேசும்போது இது எனது கடைசி வீடியோ பதிவு என்று தெரிவித்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT