Published : 19 Feb 2015 10:10 AM
Last Updated : 19 Feb 2015 10:10 AM
பின்னர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார். அப்போது அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் நுழைய, அங்குள்ள முஸ்லிம் பிரமுகர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஒசாமா பின் லேடனின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
பெருமளவில் நிதி திரட்டி ஆப்கனில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு அதை ரகசியமாக அனுப்பி வைத்தார்.
பின்னர் ஆப்கானிஸ்தானுக்கும் ஒசாமா பின் லேடனுக்கும் இடை யில் நடைபெற்ற விஷயங்களை நாம் ஏற்கெனவே (இதே பகுதியில் முன்பு இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் குறித்த தொடரில்) பார்த்து விட்டதால் அதற்குப் பின் நடைபெற்ற விஷயங்களுக்கு வருவோம்.
சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு நீங்கிய பிறகு ஒசாமா பின் லேடன் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு திரும்பினார்.
அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ‘இனி இந்த நாட்டை விட்டு வெளியேறக்கூடாது’ என்று அவருக்குத் தடை விதித்தது சவுதி அரேபியா.
என்றாலும் தன்னைத் துடிப் புடன் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஒசாமா பின் லேடன் சதாம் ஹுசேன் சவுதி அரேபியாவின் மீது போர் தொடுப்பார் என்று அரசை எச்சரித்தார்.
அப்படிப் போர் நிகழ்ந்தால் எந்த மாதிரியான வியூகங்களை வகுக்கலாம் என்றும் தன் ஆலோசனைகளை எழுத்து வடிவில் அரசுக்கு அனுப்பினார். ஆனால் அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
ஒசாமா பின் லேடன் எச்சரித்த படி இராக் படைகள் சவுதி அரேபியவுக்குள் நுழையத் தொடங்கின. ஒசாமா பின் லேடன் அனுப்பிய ஆலோசனைகளை மதிக்காமல் அமெரிக்க உதவியை நாடியது சவுதி அரசு.
இது ஒசாமா பின் லேடனின் வாழ்க்கையில் மற்றொரு பெரும் திருப்பு முனையை அளித்தது. அதற்குப் பிறகு அரச குடும்பத் தினரையோ, அதிகாரிகளையோ சந்திப்பதைத் தவிர்த்தார். முஸ்லிம் மத குருமார்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஒவ்வொரு முஸ்லிமும் ராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று பிரசங்கம் செய்தார். சவுதி அரசுக்கு இதெல் லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. நாட்டை மட்டுமல்ல, அவர் தங்கிய ஜிட்டா பகுதியை விட்டே அவர் வெளியேறக் கூடாது என்று தடை விதித்தது. இதுவும் போதாதென்று அவர் இல்லாதபோது அவரது பண்ணை வீட்டை சோதனை இட்டது.
ஒசாமா பின் லேடன் இதனால் கடும் கோபம் அடைந்தார். தன் ஆழமான அதிருப்தியை வெளிக் காட்டினார். ஒப்புக்கு சில ஆறுதல் வார்த்தைகளை உதித்தார் இளவரசர். ஆனால் ஒசாமா பின் லேடனுக்கு விதிக்கப் பட்டிருந்த தடை நீக்கப்பட வில்லை.
சவுதி அரேபியாவில் எந்கு திரும்பினாலும் அமெரிக்கப் படைகள். அங்கு தங்கவே அவருக்குப் பிடிக்கவில்லை. 1991 ஏப்ரல் மாதம் ரகசியமாக பாகிஸ்தானுக்குச் சென்றார் ஒசாமா பின் லேடன். அதற்குப் பிறகு சவுதி அரேபியாவுக்கு அவர் இறுதிவரை திரும்பி வரவே இல்லை.
ஆக தான் பிறந்து வளர்ந்த சவுதி அரேபியாவின் மீது இவ் வளவு வெறுப்பை பின்னொரு காலத்தில் உமிழ்ந்ததற்குக் காரணம் அமெரிக்காதான்.
(சவுதி அரசும் “நமதுமுதல் எதிரி ஒசாமா பின் லேடன்தான்” என்று வெளிப்படையாகவே அறிவித் தது). பின்னர் ஒசாமா பின்லேடன் அமெரிக்காவினால் வேட்டை யாடப்பட்டு கொல்லப்பட்டார். ஆனால் அல் காய்தா இயக்கம் இன்னமும் தாராளமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரேபிய அரசுக்கோ, அதன் இளவர சர்களுக்கோ தொடர்பு இருக்குமா? தாக்குதலின் பின்னணியில் தாங்கள்தான் இருப்பதாக அல் காய்தா வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.
அப்படியா னால் சவுதி அரேபியா அரசுக்கும் அல் காய்தா இயக்கத்துக்கும் மறை முக ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டதா? சித்தாந்த மத வேறுபாடுகளை முன்னணிக்குக் கொண்டுவந்து விட்டு, அமெரிக்காவின் சமீப கால உறவுகளை சவுதி அரசு ஒரு பொருட்டாக நினைக்கவில் லையா? திரை விலகுமா?
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT