Last Updated : 20 Feb, 2015 05:56 PM

 

Published : 20 Feb 2015 05:56 PM
Last Updated : 20 Feb 2015 05:56 PM

தென்னாப்பிரிக்காவில் 29 பலாத்கார வழக்குகளின் குற்றவாளிக்கு 1,500 ஆண்டுகள் சிறை

தென்னாப்பிரிக்காவில் 29 பலாத்கார வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு 1,535 வருடங்கள் சிறை தண்டனை அளித்து, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகன்ஸ்பெர்கைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மோராகே. இவர் கடந்த 2007 முதல் 2013 வரை தொடர்புடைய 29 பலாத்கார வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 1,535 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கொள்ளை, கடத்தல் மற்றும் கொலை முயற்சி என கூடுதலாக 144 வழக்குகளிலும் இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக 'தி டைம்ஸ் டெய்லி' பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆல்பர்ட் மோராகே, பெண்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி அவர்களைப் பணியவைத்து பலாத்காரத்தில் ஈடுப்பட்டதாக விசாரணையில் ஈடுப்பட்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரியான் ஸ்ட்ரைடோம் தனது தீர்ப்பில் கூறும்போது, 'இந்தச் செயலுக்காக மோராகே வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. தவிர, இவர் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும்போது தக்கப் பாதுகாப்புடனும் அனைத்து முன்னேற்பாடுகளுடனும் ஈடுபட்டுவந்திருக்கிறார்' என்று குறிப்பிட்டார்.

தென்னாப்பிரிக்காவின் கடுமையான சட்டவிதிகளின்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைகளின் அடிப்படையில் குறைந்தது 25 ஆண்டுகளுக்கு அவரால் பரோலில்கூட வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x