Published : 11 Feb 2015 10:39 AM
Last Updated : 11 Feb 2015 10:39 AM
நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், இங்கிலாந்தில் உள்ள ப்ளூம்ஸ்பரி குழுமத்தால் ஏற்படுத் தப்பட்டுள்ள 'சார்ல்ஸ்டன்-ஈ.எஃப்.ஜி. ஜான் மேனார்ட் கீன்ஸ்' விருதை வென்றுள்ளார்.
பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ் விட்டுச்சென்ற பாரம்பரியத்தைப் பின் தொடரும் பொருளாதார நிபுணர்களைக் கவுரவிக்கும் வகையில் இந்த விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பெறும் முதல் நபர் அமர்த்தியா சென் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது 7,500 பவுண்ட் (சுமார் ரூ. 7 லட்சம்) ரொக்கப் பரிசைக் கொண்டதாகும். இந்தத் தொகையைப் பயன்படுத்தி அவர் ஏதேனும் ஆய்வுகளை மேற்கொள்ளலாம். மேலும், இங்கிலாந்தில் நடைபெறும் சார்ல்ஸ்டன் திருவிழாவில் 'சார்ல்ஸ்டன்-ஈ.எஃப்.ஜி. கீன்ஸ் உரை' ஒன்றை நிகழ்த்துவதற்கும் சென்னுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், வருகிற மே மாதம் 23ம் தேதி, 'தி எகனாமிக் கான்ஸிகுவென்சஸ் ஆஃப் ஆஸ்டெரிட்டி' (அரசு சிக்கன நடவடிக்கையால் ஏற்படும் பொருளாதார விளைவுகள்) எனும் தலைப்பில் சென் உரையாற்றவுள்ளார்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் தற்போது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
பட்டினி, வறுமை, நலவாழ்வுப் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு இவர் எழுதிய பல நூல்கள் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இந்த விருதுக்குத் தான் தேர்வானது குறித்து அவர் கூறும்போது, "இந்த விருதால் நான் பெருமை படுத்தப்பட்டுள்ளேன். 'பொருளாதார பெருமந்தம்' ஏற்பட்டபோது, அறிஞர் கீன்ஸ் வழங்கிய பொருளாதார ஞானத்தின் மூலமாகத்தான் இன்று இந்த உலகம் பாதுகாப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
பகுதியாகவோ அல்லது முழுமை யாகவோ அவர் அளித்துச் சென்ற ஞானம் புறக்கணிக்கப் படுகிறபோது, பெரும்பான்மை யான மக்கள் தேவையில்லாமல் துன்பத்துக்கு ஆளாகிறார்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT