

புதுடெல்லி: இந்திய தேசியக் கொடியுடன் 3 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்துள்ளன. அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கியது. அதனால், ஈரான் கடல் பகுதியில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன்னர் கையெழுத்தானது. இதையடுத்து அடுத்த 60 நாட்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமாகக் கப்பல்கள் செல்லலாம் என்று ஈரான் அறிவித்தது. ஆனால், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால், அமைதி ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக நேற்றுமுன்தினம் ஈரான் அறிவித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்திய தேசியக் கொடி ஏற்றிய தேஷ் வைபவ், தேஷ் விபார், சன்மார் ஹெரால்டு ஆகிய 3 கப்பல்கள் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் நேற்றுமுன்தினம் அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்த 3 கப்பல்களும் கடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அவற்றில் மொத்தம் 8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு அந்தக் கப்பல்கள் பாதுகாப்பாக ஜலசந்தியை கடந்துள்ளன. இருதரப்புக்கும் இடையில் போர் தொடங்கிய பிறகு, இந்திய தேசியக் கொடியுடன் ஒரே நாளில் 3 கப்பல்கள் கடந்துள்ளது இதுவே முதல் முறை. இந்த 3 கப்பல்களையும் சேர்த்து இதுவரை 13 இந்தியக் கப்பல்கள், 5 வெளிநாட்டு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன.
இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவல் கூறும்போது, ‘‘இந்திய தேசியக் கொடி ஏற்றிய அந்த 3 கப்பல்களிலும் மொத்தம் 94 இந்தியர்கள் பணிபுரிகின்றனர். கடல் பாதுகாப்பு, இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது’’ என்றார்.
அந்த 3 கப்பல்களில் சன்மார் ஹெரால்டு கப்பல், கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற போது ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். அதனால் கப்பல் மீண்டும் திரும்பிச் சென்றது. தற்போது அந்தப் பகுதியைப் பாதுகாப்பாக கடந்து வந்துள்ளது.
இந்தக் கப்பல் ஒடிசா மாநிலம் பரதீப் துறைமுகத்துக்கு ஜூலை 1-ம் தேதி வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேஷ் வைபவ் கப்பல் குஜராத்தின் வடினார் துறைமுகத்துக்கும், தேஷ் விபார் கப்பல் சிக்கா துறைமுகத்துக்கும் வரும் 24-ம் தேதி வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், எஸ்எஸ்எல் காவேரி, தேஷ் சுரக் ஷா ஆகிய 2 இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க காத்திருக்கின்றன என்று கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ‘மரைன்டிராப்பிக்’ போர்டல் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவுக்கு வரவேண்டிய 31 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கின்றன. அவற்றில் 16 கப்பல்களில் உரங்கள் உள்ளன. அந்தக் கப்பல்களும் ஒவ்வொன்றாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.