Last Updated : 23 Jan, 2015 05:31 PM

 

Published : 23 Jan 2015 05:31 PM
Last Updated : 23 Jan 2015 05:31 PM

தீவிரவாதத்தை அலசும் பேபி படத்துக்கு பாகிஸ்தானில் தடை

இஸ்லாமியர்களை குறிவைக்கும் எதிர்மறை கதாபாத்திரங்கள் கொண்டுள்ளதாகக் கூறி, நடிகர் அக்‌ஷய் குமார் நடித்திருக்கும் இந்தி படமான 'பேபி'-க்கு பாகிஸ்தான் தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது.

இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடித்திருக்கும் திரைப்படம் 'பேபி'. 'தி வெட்ணஸ்டே', 'ஸ்பெஷல் 26' ஆகிய படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்த நீரஜ் பாண்டேதான் இந்தத் திரைப்படத்தின் இயக்குநர். இந்தியாவில் இன்று இப்படம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் தணிக்கை வாரியம் அந்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.

" 'பேபி' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை குறிவைக்கும் எதிர்மறை கதாபாத்திரங்கள் நிறைந்திருப்பதாலும், எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு இஸ்லாமியர்களின் பெயர்கள் வைக்கப்பட்டிருப்பதாலும் இந்தப் படத்துக்கு இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது" என்று பாகிஸ்தானின் டான் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில் 'பேபி' படத்தின் சி.டி. மற்றும் டி.வி.டி.க்கள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 'தி இந்து'-வுக்கு இயக்குநர் நீரஜ் பாண்டே அளித்தப் பேட்டியில், " 'பேபி' திரைப்படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிரான பார்வைகள் எதுவும் இல்லை.

மனிதர்கள் வேண்டுமென்றால் தவறானவர்களாக இருக்கலாம். ஆனால், ஒரு நாடோ அல்லது எந்த ஒரு மதமோ தவறானதாக இருக்காது. தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதாக மட்டுமே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல. பாகிஸ்தானைச் சேர்ந்த 3 நடிகர்கள் கூட இதில் நடித்துள்ளனர்" என்றார் நீரஜ் பாண்டே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x