Published : 07 Jan 2015 01:19 PM
Last Updated : 07 Jan 2015 01:19 PM
இந்தியாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால், அங்கு சுற்றுலாச் செல்பவர்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தனது குடிமக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய வெளிநாட்டு வர்த்தக துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் பெரிய நகரங்கள் அல்லது வர்த்தக ரீதியில் முன்னேற்றமடைந்த நகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இதனால், இந்தியாவுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தீவிரவாத ஊடுருவல் மட்டுமல்லாமல் அங்கு உள்நாட்டு அமைதியின்மை, குற்ற நடவடிக்கைகள் மற்றும் வாகன விபத்துகளால் உயிர் சேதம் ஆகிய அபாயங்கள் அதிகமாக இருக்கிறது.
இந்தியாவில் முன்னெச்சரிக்கை இல்லாத தாக்குதல்கள் நடத்தப்படும் அல்லது குறுகிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்படும் என்று எங்களுக்கு அவ்வப்போது தகவல்கள் வருகின்றது.
இந்தத் தாக்குதல் எச்சரிக்கை அங்கு செல்லும் வெளிநாட்டவர்களை குறிவைக்கும் வகையாக எங்களுக்கு தெரிகிறது. இதில் குறிப்பாக ஆஸ்திரேலியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதேபோன்ற எச்சரிக்கையை இந்தோனேசியா, பாலி ஆகிய நாடுகளுக்கு செல்லும் அந்நாட்டு மக்களுக்கும் ஆஸ்திரேலிய அரசு விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT