

தென் சீனக் கடல் அருகே கடந்த மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அதில் சென்ற 239 பயணிகளும் உயிரிழந்ததாகவும் மலேசிய விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், விமானத்தை தேடும் பணியை நிறுத்த வேண்டாம் என்று சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் எம்.எச்.370 சீன கடற்பகுதியில் மாயமானது.
தற்போது பலதரப்பு தேடல்களுக்கு பின்னர் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அதில் சென்ற 239 பயணிகளும் உயிரிழந்ததாகவும் மலேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் விமானத்தில் இறந்த பயணிகள் சட்ட ரீதியில் இழப்பீடு பெற தற்போது வழி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அந்த ஆணையத்தின் தலைமை அதிகாரி அசாருதீன் ரகுமான் கூறும்போது, "மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
ஆனால் இந்தக் கட்டத்தில் மலேசிய விமானம் விபத்துக்குள்ளானதை ஆழ்ந்த வருத்தத்தோடும் கனமான நிலையிலிருந்து தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.
இதனிடையே, விமான தேடலை நிறுத்திவிட வேண்டாம் என்று மலேசிய அரசுக்கு சீனா கோரிக்கை விடுத்துள்ளது.