Published : 14 Jan 2015 01:26 PM
Last Updated : 14 Jan 2015 01:26 PM

தலிபான், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை அழிக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை

பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து தீவிரவாத அமைப்பு களையும் அழிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று இஸ்லாமாபாதில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெஷாவர் பள்ளியில் நடத்தப் பட்ட தீவிரவாத தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்.

தலிபான், ஹக்கானி நெட் வொர்க், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் மிகப்பெரிய அச் சுறுத்தலாக உள்ளன. இந்த தீவிர வாத அமைப்புகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். தற்போது வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ் தான் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன.

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. எனவே இந்தியா, பாகிஸ்தான் இடையே தடைபட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் எல்லையில் இந்திய, பாகிஸ்தான் ராணுவங்கள் அண்மைகாலமாக பீரங்கி தாக்கு தல் நடத்தி வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, எல்லை விவகாரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இருநாடுகளும் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்கும் என நம்புகிறேன் என்றார்.

பாகிஸ்தான் குற்றச்சாட்டு

ஜான் கெர்ரியுடன் இணைந்து பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸும் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அவர் கூறியபோது, தெற்காசியாவில் அமைதியை ஏற் படுத்த அமெரிக்கா தனது செல் வாக்கை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த ஜான் கெர்ரி, இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையே பதற்றம் நீடிப்பதை அமெரிக்கா விரும்ப வில்லை, அனைத்து பிரச்சினை களுக்கும் இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

7 கைதிகளுக்கு தூக்கு

பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களுடன் தொடர்புடைய 7 கைதிகளுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

விமானப் படையில் இளநிலை தொழில்நுட்ப பணியாளராக இருந்த நவாசிஸ் அலி என்பவர் உள்பட அந்நாட்டின் பல்வேறு சிறைகளில் இருந்த 7 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2003-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கொல்ல முயற்சி நடந்தது. இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட விமானப் படை ஊழியர் நவாசிஸ் அலியும் முஷ்டாக் அகமது (சிவிலியன்) என்பவரும் பைசலாபாத் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

முகம்மது தல்ஹா, காலில் அகமது, ஷாகித் ஹனீப் ஆகிய மூவருக்கு சுக்குர் மத்திய சிறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாதுகாப்பு அமைச்சக இயக்குநராக இருந்த சையது ஜாபர் அலியை கொலை செய்ததற்காக இவர்கள் மூவருக்கும் நீதிமன்றம் 2001-ம் ஆண்டு மரண தண்டனை விதித்திருந்தது.

இவர்கள் தவிர, பெஹ்ராம் கான் என்பவர் கராச்சி மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முகம்மது அஷ்ரப் என்பவரை நீதிமன்ற அறையிலேயே சுட்டுக்கொன்றார். தீவிரவாத செயல்கள் தடுப்பு நீதிமன்றத்தால் அதே ஆண்டு ஜூன் மாதம் இவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.

இறுதியாக ஜுல்பிகர் அலி என்பவர் ராவல்பிண்டி சிறையில் தூக்கிலிடப்பட்டார். கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகில் 2 போலீஸ் காவலர்களை சுட்டுக் கொன்றதற்காக இவர் தண்டிக்கப்பட்டார்.

பெஷாவர் நகர பள்ளியில் கடந்த மாதம் 150 பேர் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது. இத்தடை நீக்கப்பட்ட பிறகு இதுவரை தூக்கிலிடப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x