Last Updated : 29 Jan, 2015 06:06 PM

 

Published : 29 Jan 2015 06:06 PM
Last Updated : 29 Jan 2015 06:06 PM

மனித உரிமைகளைக் காத்திட வேண்டியது மோடி அரசின் கடமை: எச்.ஆர்.டபிள்யூ. வலியுறுத்தல்

மனித உரிமைகளை மீறி நீதிக்கு புறம்பாகச் செயல்படும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர், ராணுவத்தினர் ஆகியோரை தயங்காமல் நீதியின் முன் மோடி அரசு நிறுத்த வேண்டும் என்று நியூயார்க்கில் வெளியிடப்பட்ட பன்னாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு ( HRW - Human Rights Watch) அமைப்பின் உலக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2015-ஆம் ஆண்டுக்கான உலக அறிக்கையை இன்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு நியூயார்க்கில் வெளியிட்டது.

2014-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடியின் அரசு பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற செயல்பட வேண்டும் என்றும், குறிப்பாக மகளிர் உரிமைகளைக் காக்கும் சட்டங்கள், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தில் மேம்பட்ட அணுகுமுறை மற்றும் செயல்திறன், சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்தல், மற்றும் வளர்ச்சியின் பயன்கள் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்குச் சென்றடைதல் ஆகியவற்றை மோடி அரசு உறுதி செய்ய வெண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது இந்த உலக அறிக்கையின் 25-வது பதிப்பாகும். சுமார் 90 நாடுகளில் மனித உரிமைகள் மீதான செயல்பாடுகளை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைபு சீராய்வு செய்து 656 பக்க உலக அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த உலக அறிக்கையின் அறிமுகக் கட்டுரையில், செயல் இயக்குநர் கென்னெத் ரோத், “கொந்தளிப்பான காலங்களில் மனித உரிமைகளைக் காப்பது ஒரு சிறந்த அற வழிகாட்டியாக அமையும் என்பதை நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். உரிமைகளை மீறுவதால் மிக மோசமான பாதுகாப்பு சவால்கள் உருவாகும்.

சுதந்திரம் மற்றும் சமத்துவம் போன்ற மதிப்பீடுகளை குறுகிய கால பலன்களுக்காக விட்டுக் கொடுப்பது நீண்ட நாளைய சவால்களைத் தோற்றுவிக்கும். 2014-ஆம் ஆண்டில் மனித உரிமைகள் மீறலுக்கான பொறுப்பேற்பு என்ற வகையில் ஊக்குவிக்கும் சிறிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குநர் மீனாக்‌ஷி கங்குலி கூறுகையில், "ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 3 கிராமத்தினர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 3 ராணுவ வீரர்கள் மற்றும் 2 அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை அளித்தது ஒரு ஊக்கம் தரும் முன்னேற்றம் என்றாலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை இன்னமும் ரத்து செய்யாமல் வைத்திருப்பது அரசின் தோல்வியாகும். இந்தச் சட்டம் மனித உரிமைகளை மீறும் ராணுவ வீரர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் காவல்காத்து வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மனோரமா தேவி கொலை வழக்கில் விசாரணைத் தகவல்கள், அவரை சித்ரவதை செய்து கொலை செய்த ராணுவ வீரர்கள் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தினால் பாதுகாக்கப்படுகின்றனர் என்பதை தெரிவிக்கிறது.

மிகவும் வெளிப்படையான, அத்துமீறல்கள், மனித உரிமை மீறல் வன்முறைகள், அநீதிகளிலிருந்தும் ராணுவ வீரர்களை இந்திய சட்டம் பாதுகாப்பது என்பது ஜனநாயகத்தில் இல்லை. ஜனநாயகம் அதற்கு இடமளிக்காது. எனவே மோடி அரசு ஆயுதப்படைகள் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

2014ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் மற்றும் குறிப்பிட்ட பகுதி மக்களைப் பாதிக்கும் பெரிய வளர்ச்சித் திட்டங்கள் என்று அரசு சாரா சமூக நல அமைப்புகள் கூறிவருகின்றன. ஆனால் அவற்றின் மீது 2014ஆம் ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் பாய்ந்துள்ளன.

2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கைலாஷ் சத்யார்த்திக்கு வழங்கப்பட்டது என்பது இந்தியாவில் இன்னமும் லட்சக்கணக்கான குழந்தைகள், சிறுவர்கள் மோசமான உழைப்புக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்பதை எடுத்துரைக்கிறது. மேலும், சாதி அடிப்படையிலான பிரிவினைகள் மற்றும் பழங்குடி சமூகத்தின் மீதான அலட்சியம் ஆகிய பிரச்சினைகள் இருந்து வருகின்றன.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகளை ஒழிக்க சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டும் அதனை திறம்பட நடைமுறைப்படுத்தும் கண்காணிப்பு திட்டங்கள் இல்லை.

சத்தீஸ்கரில் 16 பெண்கள் அரசு மருத்துவ முகாம் சிகிச்சை காரணமாக பலியானது என்பது குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் இலக்கு சார்ந்த அணுகுமுறைக்கு எதிராக குரல்கள் எழும்பத் தொடங்கியுள்ளது. தரமான கவனிப்பும், சுதந்திரத் தெரிவுக்குமான வாய்ப்புகளும் மறுக்கப்படுவதை இது காட்டுகிறது.

வர்த்தகம், முதலீடு, ஆகியவற்றைக் கோரும் வகையில் உலகத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் தீவிரமான உறவுகளில் மோடி ஈடுபட்டுள்ளார். ஆனால் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி அவர் பேசுவதில்லை.

உலகம் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு தீர்வு காண நரேந்திர மோடி ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். ஆனால், மனித உரிமைகள்என்ற விவகாரத்தில், இந்தியாவின் ஏமாற்றமளிக்கும் மரபை உடைப்பதில் அவரது அரசு எந்த வித அறிகுறிகளையும் இதுவரை அளிக்கவில்லை.

வளரும் சக்திமிக்க நாடாக, இந்தியா அடக்குமுறை ஆட்சிகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்களின் நன்மைக்காக இந்தியா செயல்பட வேண்டும், அவர்களை புறக்கணிப்பது கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x