

பாலியல் தொழிலில் சிறுமிகள் தள்ளப்பட்டுள்ளனர், கடவுள் இதை ஏன் அனுமதித்தார் என்று 12 வயது சிறுமி, போப்பாண்டவர் பிரான்சிஸிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளிக்க முடியாமல் தவித்த போப்பாண்ட வர், அந்தச் சிறுமியை கட்டித் தழுவி ஆறுதல் கூறினார். சில நாள்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு போப்பாண்டவர் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதரவற்ற 12 வயது சிறுமி பாலோமர் கலந்து கொண்டார்.
அந்தச் சிறுமி போப்பாண்டவரிடம் கூறியதாவது:
என்னைப் போல் ஏராளமான குழந்தைகள் பெற்றோரால் கைவிடப்படுகின்றனர். இதில் பெரும்பாலான சிறுமிகள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் போதை கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கடவுள் இதை ஏன் அனுமதித்தார், எங்களுக்கு ஏன் இந்த நிலைமை என்று கண்ணீர் மல்க கூறினார்.
அந்தச் சிறுமியின் கண்ணீருக்கு போப்பாண்டவரால் பதில் அளிக்க முடியவில்லை. உணர்ச்சிபெருக்குடன் அவரை கட்டித் தழுவி ஆறுதல் கூறினார். பின்னர் போப்பாண்டவர் பேசியபோது, இந்தச் சிறுமியின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அவள் வார்த்தைகளால் பேசவில்லை, கண்ணீரால் பேசுகிறாள் என்று தெரிவித்தார்.