Published : 05 Jan 2015 02:57 PM
Last Updated : 05 Jan 2015 02:57 PM

அதிகரிக்கும் ஆன்லைன் வர்த்தகம்

ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புத்தங்களில் ஆரம்பித்த ஆன்லைன் வியாபாரம் இப்போது கார், இருசக்கர வாகனம், வீடு வாங்குவது வரை வளர்ந்திருக்கிறது. நம்முடைய நேரத்தை, பணத்தை மிச்சப்படுத்தும் ஆன்லைன் வர்த்தகத்தை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி? என்று தெரிந்து கொள்ளலாம்.

இணையதளம்

பல இணையதளங்கள் பொருள்களை விற்றாலும் பாதுகாப்பான இணையதளம் மூலம் பொருட்களை வாங்குவது நல்லது. ‘https’ என்று ஆரம்பிக்கும் இணையதளம் பாதுகாப்பானவை. சில இணையதளங்கள் ‘http’ என்று ஆரம்பித்திருக்கும். அதுபோன்ற இணையதளங்களை தவிர்க்கவும். இதுபோன்ற இணையதளங்கள் மூலம் உங்களது தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு அதிகம்.

வை-பை

அதேபோல பொது இடங்களிலோ அல்லது இலவசமாகக் கிடைக்கும் வை-பை பயன்படுத்துவது நமக்கு விருப்பமானதாக இருக்கலாம். ஆனால் அதனை பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். இவை மூலமும் உங்களது தகவல்கள் திருடுபோகலாம். அதேபோல பயன்படுத்தும் கணிப்பொறியில் சரியான Anti Virus -யை பொறுத்தவும்.

கிரெடிட் கார்ட்

அனைத்து விதமான ஆன்லைன் வர்த்தகத்துக்கும் ஒரே கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் என்ன பொருட்கள் வாங்கி இருக்கிறோம், எவ்வளவு வாங்கி இருக்கிறோம் என்பதை மதிப்பிட முடியும். மேலும், குறைந்த தொகையாக இருக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தவும். ஒரு வேளை எதாவது தவறு நடக்கும்பட்சத்தில் குறைந்த நஷ்டம் ஏற்படும்.

அதேபோல ஆன்லைன் வர்த்தகத்துக்கு டெபிட் கார்டை விட கிரெடிட் கார்டையே பயன்படுத்தவும். டெபிட் கார்ட் பயன்படுத்தும் போது, சமயங்களில் ஆர்டர் முழுமையாகி இருக்காது, ஆனால் பணம் எடுக்கப்பட்டிருக்கும். சில நாட்களுக்குள் வங்கி கணக்கு வந்தாலும், உடனடி செலவுக்கு கஷ்டப்பட வேண்டி இருக்கும். ஆனால் கிரெடிட் கார்டில் இந்த பிரச்சினை கிடையாது.

கவனம் தேவை

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது, நாம் எங்கேயும் அலையப் போவதில்லை, நம்முடைய நேரம் மிச்சமாகும், பணமும் மிச்சமாகும். மேலும், கார்டு மூலம் பணம் செலுத்துவதால் இவ்வளவு தொகையை செலவழிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் பொருட்களை வாங்கிவிடுவோம்.

உளவியல் ரீதியாக பணத்தைக் கையால் தொட்டு புழங்கும்போது எச்சரிக்கையாக இருக்கும் நாம், கார்டு மூலம் செலவழிக்கும் போது அந்த கவனம் இருக்காது. இதனால் தேவையற்ற பொருட்களை அதிகமாக வாங்கிக் குவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. தவிர மொபைல் போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை குறைந்த காலத்தில் மாற்றும் வாய்ப்பு இருப்பதால் சுயகட்டுப்பாடு தேவை. இல்லையெனில் ஒவ்வொரு மாதம் வரும் சம்பளத்தை கிரெடிட் கார்டுக்கு மட்டுமே செலுத்த வேண்டியதாக இருக்கும்.

விலை வேறுபாடுகள்

நிறைய இணையதளங்கள் வந்துவிட்டதால் விலைகளை ஒப்பிட்டு பார்த்து வாங்குவதன் மூலம் லாபம் கிடைக்கும். விலையை ஒப்பீடு செய்வதற்கு கூட சில இணையதளங்கள் இருக்கின்றன. அதுபோன்ற இணைய தளங்களுக்கு சென்று முடிவு செய்யலாம்.

சில இணையதளங்கள் கூரியர் கட்டணம் வசூலிப்பார்கள். சில நிறுவனங்கள் இலவசமாக டெலிவரி செய்வார்கள். அதனால் பொருட்களின் விலையை மட்டும் பார்க்காமல், மொத்தமாக எவ்வளவு செலவாகிறது என்பதை பொறுத்து எந்த இணையதளத்தில் வாங்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.

வாரண்டி உள்ளிட்ட ஒவ்வொரு நிறுவனத்தின் நிபந்தனைகளை சரியாக படித்து பாருங்கள். அதாவது, கேஷ் ஆன் டெலிவரி, பொருளை திருப்ப அனுப்புவது, வாரண்டி உள்ளிட்ட விஷயங்களில் என்ன விதிமுறை, பொருட்கள் எப்போது கிடைக்கும் என்பது உள்ளிட்ட விஷயங்களை கவனிக்கவும். மேலும், ஆன்லைன் மூலம் வாங்கியவை சம்பந்தமாக ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x