

தீவிரவாத தாக்குதலுக்குப் பின் இன்று வெளியான சார்லி ஹெப்டோவின் முதல் பதிப்பின் பிரதிகள் அனைத்தும் விடியலுக்கு முன்னரே விற்று தீர்ந்தன.
பிரான்ஸ் வார இதழான சார்லி ஹெப்டோவின் அட்டை படத்தில் மீண்டும் முகமது நபிகள் கருத்துச் சித்திரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதனால், தீவிரவாத தாக்குதலுக்கு பின்னரான சார்லி ஹெப்டோவின் முதல் பதிப்புக்கு பிரான்ஸில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை காலை வெளியான பதிப்புகள் அனைத்தும் விடியலுக்கு முன்னரே விற்று தீர்ந்தன.
உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் பத்திரிகையை வாங்க வந்த மக்களுக்கு பிரதிகள் கிடைக்கவில்லை.
பிரதிகள் கிடைக்காததால் சார்லி ஹெப்டோ பத்திரிகையை வாங்க பிரான்ஸ் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. காத்திருந்த மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடனே திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்லி ஹெப்டோவின் அட்டைப் படத்தில் நபிகள் நாயகத்தை சித்தரித்து வந்திருக்கும் இந்த பதிப்புக்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு, வழக்கமாக வரும் 30 லட்சம் பதிப்புகளை விட 50 மடங்கு அதிக பதிப்புகள் தயாரிக்கப்பட்டது.
இதற்காக சார்லி ஹெப்டோ பத்திரிகைக்கு பிரான்ஸின் விடுதலை இயக்கத்தைச் சார்ந்த பல பத்திரிகை அலுவலகங்கள் உதவிப்புரிந்தன.
முன்னதாக நபிகள் நாயகத்தை சித்தரித்த கருத்துச் சித்திரம் கொண்ட சார்லி ஹெப்டோவின் அட்டைப்படம் மட்டும் ஒரு நாளுக்கு முன்னரே பிரத்யேகமாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.