Last Updated : 11 Jan, 2015 05:29 PM

 

Published : 11 Jan 2015 05:29 PM
Last Updated : 11 Jan 2015 05:29 PM

ராணுவ ஆட்சி அமைக்க சதி செய்தாரா ராஜபக்ச?- விசாரணை மேற்கொள்கிறது இலங்கையின் புதிய அரசு

இலங்கையில், ராணுவ ஆட்சி அமைக்க முன்னாள் அதிபர் ராஜபக்ச சதி செய்தாரா என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என புதிய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை தேர்தலில் எதிர்ப்பு அலைகள் அதிகம் இருந்ததால் ஒருவேளை தோல்வியுற்றால் அங்கு ராணுவ ஆட்சி அமைக்க ராஜபக்ச திட்டமிட்டதாகவும் இதற்கு ராணுவ தளபதி இணங்க மறுத்த பின்னரே அவர் பதவி விலகியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியான இத்தகவல் குறித்து விசாரணை நடத்தப்படும் இலங்கையின் புதிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை அரசு செய்தித் தொடர்பாளர் மங்கள சமரவீரா செய்தியாளர்களிடம் கூறுகையில், "முன்னாள் அதிபர் ராஜபக்ச ராணுவ ஆட்சி அமல்படுத்தும் சதிவேலைகளில் ஈடுபட்டாரா என்பது குறித்த விசாரணையை இலங்கையின் புதிய அரசு மேற்கொள்ளும்.

ராஜபக்சவின் இந்த சதி வேலைக்கு ராணுவத்தளபதி மற்றும் காவல்துறை தலைவர் ஒத்துழைக்க மறுத்துள்ளனர் என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்துள்ளது. எனவே இது தொடர்பான விசாரணைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடைசி சுற்று வாக்குகள் எண்ணப்படும் முன்னரே ராஜபக்ச தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். ராஜபக்சவின் இந்த அணுகுமுறை பாராட்டுகளைப் பெற்றது.

ஆனால் இதற்கு பின்னால் சில உலக நாடுகள் இருக்கின்றன. ஒரு சில நாடுகளின் தலைவர்கள் ராஜபக்சவை அழைத்து, தோல்வியை ஒப்புக்கொண்டு சுமுகமான ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு வலியுறுத்தியதாகவும். அதனை பின்பற்றியே அவர் அவ்வாறு அறிவித்ததாகவும் தெரிகிறது. இது பல்வேறு சந்தேகத்தை எழுப்புகிறது. ஆனால் ராஜபக்சவை எந்தெந்த நாட்டுத் தலைவர்கள் தொடர்பு கொண்டார்கள் என உறுதியாக இப்போதைக்கு கூறமுடியாது" என்றார்.

ராணுவ படைத்தளபதிக்கு அழுத்தம்:

ராஜபக்ச தேர்தலில் தான் தோற்றவுடன் ராணுவத் துருப்புகளை நாடுமுழுவதும் களம்இறக்க ராணுவ படைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் தயா ரத்னாயகேவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால் ராஜபக்சவின் சட்டவிரோத கோரிக்கைக்கு செவிசாய்க்க தலைமைத் தளபதி மறுத்துவிட்டார். கடைசி நிமிடம் வரை அவர் பதவியில் இருப்பதற்காக கடுமையாக முயன்றுள்ளார். வேறு வழிகளே இல்லை என்று தெரிந்தபிறகுதான் அவர் தன்நிலையை உணர்ந்து வெளியேற முடிவு செய்தார் என்று சிறிசேனாவின் தலைமை செய்தித் தொடர்பாளரான ரஜித சேனரத்னேவும் முன்னரே தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

அதே வேளையில், நடந்து முடிந்த தேர்தலில் நேர்மையாக செயல்பட்ட ராணுவத் தளபதி, போலீஸ் துறைத் தலைவர், தேர்தல் ஆணையர் ஆகியோரை பாராட்டுகிறோம். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்காக ஜனநாயக மரபுகளை அவர்கள் கட்டிக் காத்துள்ளனர் என ரஜித சேனரத்னே தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே தரப்பு மறுப்பு

ராணுவத் தரப்பிலிருந்து இதற்கு உடனடிக் கருத்துக்கள் எதுவும் வரவில்லை. ஆனால் ராஜபக்சவின் செய்தித் தொடர்பாளர் மோகன் சமரநாயகே, இது ஆதரமற்ற குற்றச்சாட்டு என மறுத்துள்ளார்.

இவர்கள் கூறும் எத்தகைய காரியங்களிலும் ராஜபக்ச இறங்கவில்லை என்றார் . உண்மையில் ஜனவரி 9 அன்று அதிகாலை 3.30 மணியளவில் வாக்கு எண்ணப்பட்டிருக்கும்போதே ராஜபக்ச தனது முடிவு எண்ணவாக இருக்கும் என தீர்மானித்துவிட்டதாக பிபிசி கூறியதை மேற்கோள்காட்டி அவர் பேசினார்.

அதிகாரத்தை கைமாற்றும் வேலைகளை மென்மையாகவே செய்யும்படி ராஜபக்ச அறிவுறுத்தினார். அரசியல்வாதிகளால் வழக்கமாக சொல்லப்படும் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார் அவர்.

ராணுவத்தின் கடந்தகால தலையீடுகள்

இலங்கையில் 1962-ல் நட்ந்த தேர்தலுக்கு ராணுவ ஆட்சி அமைக்க எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததையடுத்து அங்கு இதுவரை ராணுவத் தலையீடுகள் இல்லாமலேயே அரசியல் அரங்கேற்றம் நடந்துள்ளது.

2010 தேர்தலில் ராஜபக்சவை எதிர்கொண்ட படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 30 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x