Published : 05 Dec 2014 10:47 AM
Last Updated : 05 Dec 2014 10:47 AM

மலேசிய எதிர்க்கட்சித் தலைவரின் ‘டத்தோ ஸ்ரீ’ பட்டம் பறிப்பு

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு சிலாங்கூர் சுல்தான் வழங்கிய ‘டத்தோ ஸ்ரீ’ கவுரவ பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.

பாக்காத்தான் ராக்யாட் கட்சித் தலைவரும் மலேசிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான அன்வாருக்கு சிலாங்கூர் சுல்தான் சார்பில் ‘டத்தோ ஸ்ரீ’ கவுரவ பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அன்வார், சுல்தானையும் மாநில முதல்வரையும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட ‘டத்தோ ஸ்ரீ’ கவுரவ பட்டம் பறிக்கப்பட்டுள்ளது என்று சுல்தான் அரண்மனை அறிவித்துள்ளது.

பட்டம் தேவையில்லை

இதுகுறித்து அன்வார் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு ‘டத்தோ ஸ்ரீ’ பட்டம் தேவையில்லை. நான் அந்த பட்டத்தை விரும்பி கேட்டு பெறவும் இல்லை, என்னிடமிருந்து எடுத்துக் கொண்டதால் வருத்தமும் இல்லை. மலேசியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் மலர தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஆட்சிமுறை

மலேசியாவில் 9 சுல்தான்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டின் மாமன்னராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவரே நாட்டின் தலைவர், முதல் குடிமகன் ஆவார். இதுபோல் அந்தந்த மாநிலங்களின் ஆட்சி நிர்வாகத்தில் மரபுவழி சுல்தான்கள் மரபுவழி தலைவர்களாக செயல்படுகின்றனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x