Last Updated : 02 Dec, 2014 09:44 AM

 

Published : 02 Dec 2014 09:44 AM
Last Updated : 02 Dec 2014 09:44 AM

ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம்: போலீஸ் தடியடி, 40 பேர் கைது

ஹாங்காங்கில் சுமார் ஒரு மாத காலம் ஓய்ந்திருந்த ஜனநாயக ஆதரவு போராட்டம் மீண்டும் தொடங்கியது. பெரும் திரளான மாணவர்கள் நேற்று அதிகாலையில் இருந்தே முக்கிய அரசு அலுவலகங்களுக்கு எதிரே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயகத்தின் சின்னமாக அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள குடையை கையில் ஏந்தியபடி ஊர்வலம் நடத்தினர்.

போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை அவர்கள் தகர்க்க முயன்றனர். இதனை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றபோது மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டக்காரர்கள் பலர் முக்கிய சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் முழுமையாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று போராட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும் இதேபோன்று போராட்டம் நடைபெற்றது. அப்போதும் போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கினர். இப்போது சுமார் ஒரு மாத காலத்துக்குப் பின் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.

2017-ம் ஆண்டு ஹாங்காங்கில் தேர்தல் நடைபெறும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. எனினும், சீன அரசு அமைக்கும் குழுவே வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் என்று கூறியுள்ளது. இதுவே பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம். சீன அரசு வேட்பாளர் களை தேர்ந்தெடுப்பதும் ஒன்றுதான், தேர்தல் நடத்தாமல் அவர்களை நியமிப்பதும் ஒன்றுதான் என்று ஹாங்காங் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x