Published : 26 Apr 2014 11:00 AM
Last Updated : 26 Apr 2014 11:00 AM

பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சுட்டுக் கொலை

வடமேற்கு பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக இக்கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது.

பெஷாவரிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது யார் ஹுசைன் கிராமம். இங்கு 12 பேர் அடங்கிய குடும்பம் ஒன்று பெஷாவர் விமான நிலையம் அருகேயுள்ள உறவினர்களைக் காண வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத சில நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் இறந்தனர்.

காயமடைந்த மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று அந்தக் குடும்பத்தினர் கூறினாலும், 'இது குடும்பத்திற்குள் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக நிகழ்ந்துள்ளது' என்றே காவல்துறையினர் கருதுகின்றனர். அக்கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை எனக் கூறும் காவல்துறையினர், விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x