Published : 11 Dec 2014 11:00 AM
Last Updated : 11 Dec 2014 11:00 AM
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கடைப்பிடிக்கும் மனிதத் தன்மையற்ற சித்திரவதை முறைகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வட கொரியா வலியுறுத்தியுள்ளது.
அல் காய்தா தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்டவர்களை சிஐஏ கையாண்ட விதம் குறித்த அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்ற குழு வெளியிட்டுள்ளது. இதில் சிஐஏ கடைப்பிடித்த கொடூர சித்திரவதை முறைகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து வட கொரியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறும்போது, “வட கொரியாவின் மனித உரிமை மீறல்கள் பற்றி விவாதிக்கும் ஐநா., தமது நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் மனித உரிமைகள் மீறலை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது. அமெரிக்காவின் எதேச்சதிகார செயல்களுக்கு பாதுகாப்பு சபை கருவியாக இருப்பதையே இது காட்டுகிறது.
சிஐஏ கையாளும் மனிதத்தன் மையற்ற செயல்கள் ஒருபுறம் இருக்க, அண்மையில் அமெரிக் காவில் கருப்பு இனத்தவர் ஒருவரை வெள்ளை இன போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்றதையும் மறக்க முடியாது. இந்த சம்பவமும் அமெரிக்காவின் கொடூரமான மனித உரிமை மீறலை காட்டுகிறது.
மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா. பாதுகாப்பு சபை விவாதிக்க விரும்பினால் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களையும் விவாதிக்கவேண்டும்” என்றார்.
மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. தங்கள் மீது இனியும் கண்டனக் கருத்துகள் கூறுவதை தடுக்கும் நோக்கத்தில் வட கொரியா இக்கருத்தை கூறியுள்ளதாக கருதப்படுகிறது.
நிர்வாணமாக அடைத்து வைப்பது, தூங்கவிடாமல் செய்வது, குளிரில் நடுங்க வைப்பது, குளிர்ந்த நீரை கொட்டுவது உள்ளிட்ட பல்வேறு கொடூர முறைகளில் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதாக அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT