Published : 06 Dec 2014 11:20 AM
Last Updated : 06 Dec 2014 11:20 AM
மாலத்தீவு தலைநகர் மாலேயில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டுக்கு உதவ இந்தியாவில் இருந்து விமானங்கள், கப்பல்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாலத்தீவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தால் தலைநகர் மாலேயில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. அந்த நகரில் வசிக்கும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். சூப்பர் மார்க்கெட், கடைகளில் குடிநீர் பாட்டில்களுக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
இதுதொடர்பாக இந்தியா, இலங்கை, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடம் மாலத்தீவு அரசு உதவி கோரியுள்ளது. இதில் இந்திய அரசு முதல் ஆளாக களம் இறங்கி விமானங்கள், கப்பல்கள் மூலம் மாலே நகருக்கு குடிநீரை கொண்டு சென்றுள்ளது. இந்தியாவில் இருந்து 5 சரக்கு விமானங்கள் மூலம் குடிநீர் பாட்டில்கள் நேற்று மாலே நகருக்கு அனுப்பப்பட்டன. மேலும் 2 கப்பல்கள் மூலமும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதேபோல் இலங்கை சார்பிலும் விமானத்தில் குடிநீர் அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று மாலே நகருக்கு குடிநீருடன் விரைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT