Published : 04 Dec 2014 10:12 AM
Last Updated : 04 Dec 2014 10:12 AM
அணு ஆயுத தயாரிப்பை முற்றிலுமாக கைவிடும் ஐ.நா. பொது சபையின் வரைவு தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்தது. அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா.வின் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.
என்.பி.டி எனப்படும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பான ஐ.நா. பொது சபையில் நேற்று வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை ஏற்கும் நாடுகள் எவ்வித நிபந்தனையும் இன்றி தங்கள் அணு ஆயுத தயாரிப்பு வசதிகளை சர்வதேச அணு சக்தி முகமையின் பார்வைக்கு அனுமதிக்க வேண்டும். அணு ஆயுத உற்பத்தியையும் முற்றிலுமாக கைவிட வேண்டும்.
முற்றிலும் அணு ஆயுதம் இல்லாத உலகை எட்டும் நடவடிக்கையாக ஐ.நா. பொது அவையில் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. அவையில் முன் எப்போதும் இல்லாத அளவாக 169 நாடுகள் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல் உட்பட 7 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. சீனா, பூடான், பிரான்ஸ், பிரிட்டன் உட்பட 5 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. 12 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஐ.நா. பொது சபை கூட்டத்துக்கு வரவில்லை.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஏற்கெனவே அணு ஆயுதங்களை பெருமளவில் தயாரித்து வைத்துக் கொண்டுள்ளது நிலையில் பிற நாடுகள் ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்று கூறுவதை ஏற்க முடியாது என்பதே இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT