Published : 12 Apr 2014 02:48 PM
Last Updated : 12 Apr 2014 02:48 PM

எம்.எச்-370 துணை விமானியின் கடைசி அழைப்பு: அவசர உதவிக்காக அழைத்தாரா?

மலேசிய விமானம் பீஜிங் நோக்கி பறக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் துணை விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு மேற்கொண்டார் என்றும். அதன் பின்னரே ராடர் பதிவிலிருந்து விமானம் மாயமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.

துணை விமானியின் அழைப்பு

இது குறித்து மலேசிய நாளிதழ் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ” விமானம் ராடார் பதிவிலிருந்து மாயமாவதற்கு முன்னர் அதன் துணை விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு ஒன்றை முயற்சித்தார். ஆனால் விமானம் அதிக வேகத்தில் பயணித்ததால், தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. துணை விமானி மேற்கொண்ட அழைப்பு உதவிக்காக மேற்கொள்ளப் பட்டிருக்கலாம்.” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பெட்டி காலாவதி ஆனதா?

கடந்த சில நாட்களாக 'சோனார்' நீர்முழ்கி இயந்திரத்தில் சில இடைவேளிகளில் பதிவான சிக்னல்கள் தற்போது நின்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கருப்புப் பெட்டியின் பேட்டரி காலவதி ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்தது என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்யும் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலுக்கு அடியிலிருந்து பதிவான சிக்னல்கள் மலேசிய விமானத்துடையது தான் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்தார்.

விமானத்தின் கருப்புப் பெட்டி இந்திய பெருங்கடலின் 15 ஆயிரம் அடி ஆழத்தி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினர். கடந்த 5 வார தேடலில் கிடைக்கப்பட்ட ஒரே உறுதியான தகவல் என்ற அடிப்படையில், விமான தேடலில் நம்பிக்கை பிறந்தது. இதனை அடுத்து தேடல் பகுதி 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவாக குறைக்கப்பட்டது. சிகனல் பதிவை வைத்து கருப்புப் பெட்டியை கண்டுபிடுக்கும் பணியில் ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க் கப்பலும், 'எச்.எம்.எஸ். எக்கோ' என்னும் இங்கிலாந்தின் நீரமூழ்கி கப்பலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது சிக்னல் பதிவு ஏதும் இல்லாமல் போனது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சம்பவ கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

அந்த விமானத்தின் நிலை குறித்து தற்போது வரை தகவல்கள் இல்லாத நிலையில், பல்வேறு நாடுகளின் உளவுத்துறையினர் முரணான தகவல்களை வெளியிட்டு வருகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x