Published : 14 Jul 2019 11:09 AM
Last Updated : 14 Jul 2019 11:09 AM
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் பேய் மழையாலும், ஆங்காங்கே ஏற்பட்டுள்ள நிலச்சரிவாலும் இதுவரை 18 பெண்கள் உள்பட 43 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாத மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறைந்த நேரத்தில் மேகத்தை கிழித்துக்கொண்டு கொட்டுவதைப் போன்று மழை பெய்ததால், மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் மலைப்பகுதியில் இருக்கும் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 10ஆயிரத்து 500 வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு நீரில் மூழ்கியுள்ளன.
மீட்புப் பணியில் போலீஸார், பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளித்து வந்த 1,104 பேரை போலீஸார் மீட்டுள்ளனர். இதில் தலைநகர் காத்மாண்டில் மட்டும் 187 பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர்மழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்காலும், நிலச்சரிவாலும் இதுவரை 18 பெண்கள் உள்பட 43 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் மீட்புப்பணியில் 27 ஆயிரத்து 380 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு தேடுதல் பணியில் இறங்கியுள்ளனர்.
நேபாள வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், " நேபாளத்தில் இன்னும் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வானம் மேகமூட்டமாக இருப்பதால் விமானப் போக்குவரத்தும், மலைப்பகுதி சாலைப் போக்குவரத்தும் தடைபடும்.
நேபாளத்தில் செல்லும் பாகமதி, கமலா, சப்தகோஷி, சன்கோஷி ஆகிய ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டி செல்வதால், ஆற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT