Published : 09 Jul 2019 03:50 PM
Last Updated : 09 Jul 2019 03:50 PM
சீனாவுடனான மசோதா இறந்துவிட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தது ஹாங்காங். பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
இந்நிலையில், குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தது. இதன்மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். மேலும், இந்தச் சட்டத் திருத்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் உறுதியாக இருந்தார்.
ஆனால், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஹாங்காங்கின் எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர். இதனால் ஹாங்காங்கில் பதற்றம் ஏற்பட்டது. உள்நாட்டுக் கலவரம் பெரிதாகும் சூழல் உருவானது.
இதனைத் தொடர்ந்து கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கடந்த வாரம் அறிவித்தார்.
எனினும் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்யுமாறு ஹாங்காங்கில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கேரி லேம் கூறும்போது, எங்கள் நிர்வாகம் அறிமுகப்படுத்தவிருந்த மசோதா முற்றிலுமாக தோல்வி அடைந்தது. மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்ற என்னுடைய அரசு நினைக்கவில்லை. மசோதா இறந்து விட்டது” என்றார்.
ஆனால், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் அமைப்புகள் கேரி லேமின் மசோதாவை திரும்பப் பெற்றுவிட்டதாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போராட்ட அமைப்பின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவரான நாதன் லா கூறும்போது, “ சட்டமன்ற மொழிகளில் திரும்பப் பெறுகிறோம்... தள்ளி வைக்கிறோம் போன்ற வார்த்தைகள் மட்டுமே உள்ளன.
அவர் மசோதாவை திரும்பப் பெறுகிறோம் என்று நேரடியாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அவரது பேச்சை நாங்கள் நம்பமாட்டோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT