காபூல் நகரை உலுக்கிய சக்திவாய்ந்த கார் குண்டுவெடிப்பு: 34 பேர் பலி; 68 பேர் படுகாயம்

காபூல் நகரை உலுக்கிய சக்திவாய்ந்த கார் குண்டுவெடிப்பு: 34 பேர் பலி; 68 பேர் படுகாயம்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று குண்டு வெடித்ததில் 34 பேர் பலியாகியுள்ளதாகவும் 68 பேர் இதில் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காபூல் நகரத்தின் உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள புல்-இ-மகமவுத் கான் பகுதியில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்தது.

அங்குள்ள  ஒரு கட்டிடத்திற்குள் தீவிரவாதிகள் நுழைந்ததாகவும் அப்போது நிலைமையைக் கட்டுப்படுத்த அந்தப் பகுதியை அடைந்த பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகவும் நேரில் பார்த்த ஒருவர் சினுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, தீவிரவாதிகள் முதலில் தங்கள் வெடிபொருள் நிறைந்த காரை வெடிக்கச் செய்தனர். பின்னரே துப்பாக்கிச் சூடு தொடங்கியது.

இப்பகுதி பாதுகாப்பு அமைச்சக கட்டிடத்தின் ஒரு கிளை, ஒரு விளையாட்டு அரங்கம், தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகம் மற்றும் வீடுகள் நிறைந்த பகுதி அருகே உள்ள பகுதியாகும்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இதன் பயங்கர சத்தம் பல கிலோமீட்டர் தொலைவில் கேட்கக்கூடியதாக இருந்தது. அதனுடன்  ஒரு பெரிய உயரும் புகை நெடுவரிசையைக் காண முடிந்ததாக எஃப்பே செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை விவாதிக்க அமெரிக்க பிரதிநிதிகள் மற்றும் ஒரு தலிபான் தூதுக்குழு கத்தாருக்கு வரும்போது ஏழாவது சுற்று கூட்டங்களை நடத்திவரும் வேளையில் இன்று இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

ஆப்கனில் ஏறக்குறைய இருபதாண்டு கால ஆயுத மோதலில் இருந்து வெளியேறும் வழியையே இரு தரப்பினரும் நாடுகின்றனர். இருப்பினும், இதுவரை ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் மறுத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in