Published : 03 Jul 2019 11:35 AM
Last Updated : 03 Jul 2019 11:35 AM
ஜப்பானின் தென்மேற்குத் தீவு நகரமான ககோஷிமாவை கனமழை தாக்கி வருவதாலும் மழை மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் அங்கிருந்து சுமார் 6 லட்சம் பேரை வெளியேற்ற ஜப்பானிய அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டனர்.
தெற்குத் தீவான கியுஷூவில் ஒரு விரிகுடாவில் ககோஷிமா அமைந்துள்ளது. தீவின் சில பகுதிகளில் கடந்த வாரம் தொடங்கி சதுர மீட்டருக்கு 900 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
ககோஷிமாவில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் காலை 8 மணி வரை ஒருமணிநேரத்தில் மட்டுமே 40 மி.மீ . மழை பெய்துள்ளது. நாளை (வியாழக்கிழமை) காலைக்குள் தெற்கு கியூஷுவில் சுமார் 350 மி.மீ . மழை பெய்யும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
பிராந்தியத்தில் சில பகுதிகள் மணிக்கு 80 மி.மீ . வரை பெறக்கூடும் என்று எஃபே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பகுதிகளில் மழைபெய்யும் தருணங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுவதே இன்று காலை 9.35 மணிக்கு தொடங்கி சுமார் 6 லட்சம் பேரை வெளியேற்றும் உத்தரவைப் பிறப்பிக்க முக்கியக் காரணம் என ககோஷிமா நகராட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் வானிலை முன்கணிப்புப் பிரிவின் தலைவர் ஊடகங்களிடம் பேசுகையில், ''டோக்கியோவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த நேரத்தில் மழை ஒரு குறுகிய காலத்திற்கு நீடிக்கும் என்று தோன்றுகிறது. இந்த மழை தொடர்ந்து கொண்டிருந்தால் வெளியேற்றச் செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும்'' என்றார்.
ஜப்பானில் கடந்த வாரம் முதலாகப் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT