Published : 29 Jun 2019 06:30 PM
Last Updated : 29 Jun 2019 06:30 PM
மரண தண்டனை மற்றும் பிற சித்ரவதை உள்ளிட்ட மனிதநேயமற்ற கொடூர தண்டனைகளில் பயன்படுத்தும் சாதனங்களின் வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வாய்ப்புகளை ஆராயும் ஐநா பொதுச்சபை தீர்மானத்தில் வாக்களிப்பதிலிருந்து இந்தியா விலகியுள்ளது.
அதாவது மரண தண்டனையை பிற சித்ரவதைகள், கொடூர தண்டனைகளுடன் சரிநிகராக வைப்பது தங்களுக்கு ஏற்புடையதல்ல என்று இந்தியா வாக்களிப்பதிலிருந்து விலகியுள்ளது.
193 உறுப்பினர்கள் கொண்ட ஐநா பொதுச்சபை ‘சித்ரவதை அற்ற வர்த்தகம்: பொதுவான பன்னாட்டுத் தரநிலைகளுக்கான வாய்ப்புகள் அளவுகோல்களுக்கான ஆய்வு’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றத்திற்கான வாக்கெடுப்பில் 81 வாக்குகள் பதிவாகின, தீர்மானத்துக்கு ஆதரவாக 20 வாக்குகள்தான் கிடைத்தது, தீர்மான வாக்கெடுப்பிலிருந்து விலகல்கள் எண்ணிக்கை 41.
மரண தண்டனை, சிறைகளில் சித்ரவதைகள், மனிதாபிமானமற்ற கொடூரமான தண்டனை முறைகள் ஆகியவற்றுக்கான பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி, சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக ஐநா பொதுச்சபை தலைமைச் செயலரிடம் உறுப்புநாடுகள் கருத்துகளை கேட்க கேட்டுக் கொண்டது.
இதில், ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பணி முதல் செயலர் பவ்லோமி திரிபாதி தீர்மான வாக்கெடுப்பிலிருந்து விலகியது குறித்து கூறும்போது, “மரண தண்டனையையும் சித்ரவதை மற்றும் பிற கொடூர தண்டனைகளுடன் சேர்ப்பது கவலைகளை அதிகரிக்கிறது. ஆனால் இந்தியா சித்ரவதைகள், இழிவு படுத்தும் விதமான தண்டனைகள் மனிதாபிமானமற்ற சித்ரவதை முறைகளைத் தடுக்க இந்தியா நிச்சயம் ஆதரவளிக்கிறது.
“சித்ரவதையிலிருந்து சுதந்திரம் என்பது மனித உரிமை என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இவ்வகை மனித உரிமையை எந்த சூழ்நிலையிலும் மதிக்காவும் பாதுகாக்கவும் இந்தியா விரும்புகிறது” என்றார்.
மேலும் சித்ரவதை என்பது குற்றம், ஆகவே ‘அது சட்டவிரோதமானது’ என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது என்றார்.
“எந்த ஒரு நாடும் தங்களது சட்ட அமைப்பு எப்படி இருக்க வேண்டும், தண்டனைச் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்வது இறையாண்மை உரிமையாகும். ஆகவே மரண தண்டனையை சித்ரவதை தண்டனைகளுடன் சேர்த்து வைத்துப் பேசுவது எங்களுக்கு ஏற்புடையதல்ல. இந்தியாவில் மிகவும் அரிதிலும் அரிதாக மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அது சட்டவிதிமுறைகளில் உள்ளது.
இத்தகைய சாராம்சமான மற்றும் நடைமுறை ரீதியிலான முரண்பாடுகளினால் தீர்மானத்தில் வாக்களிப்பதிலிருந்து இந்தியா விலகியது” என்றார் திரிபாதி.
வரவிருக்கும் ஐநா பொதுச்சபை அமர்வில் வெறும் சித்ரவதை நோக்கங்களுக்காகவே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்கள் வர்த்தகத்தை தடை செய்வது குறித்து ஐநா உறுப்பு நாடுகள் பெரிய விவாதத்தில் ஈடுபடப்போகின்றன ஆனால் இந்த வரைவு தீர்மானம் பல முரண்படு விஷயங்களையும் ஒன்று சேர்த்துள்ளது என்கிறார் திரிபாதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT