Published : 27 Aug 2017 12:22 PM
Last Updated : 27 Aug 2017 12:22 PM
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 3 போலீஸார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து லண்டன் மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே தடை செய்யப்பட்ட பகுதியில் ஒரு கார் வந்து நின்றது. இதையடுத்து அங்கு நின்றிருந்த போலீஸ் வேனிலிருந்து வெளியே வந்த போலீஸார் (ஆயுதமின்றி), அந்தக் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் காரிலிருந்த சுமார் 4 அடி நீளமுள்ள வாளை எடுத்து போலீஸாரை தாக்கி உள்ளார். இதில் 3 போலீஸார் லேசாக காயமடைந்தனர். அப்போது அந்த இளைஞர் ‘அல்லாஹு அக்பர்’ என தொடர்ந்து முழக்கம் எழுப்பி உள்ளார்.
பின்னர் அந்த நபரை கைது செய்த போலீஸார், மத்திய லண்டன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிரவாத தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தீவிரவாத தடுப்புப் பிரிவு உயர் அதிகாரி கமாண்டர் தீன் ஹைடன் கூறும்போது, “பக்கிங்காம் பகுதியில் தாக்குதல் நடத்தியவர் தனியாகவே செயல்பட்டதாக கருதுகிறோம். எனினும், தீவிரவாத சதி இருக்கிறதா என விசாரணை நடத்தி வருகிறோம். அந்தப் பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT