Published : 06 Aug 2017 12:00 PM
Last Updated : 06 Aug 2017 12:00 PM

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம்: ஐ.நா.விடம் அமெரிக்கா தகவல்

பாரிஸ் பருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக ஐ.நா.விடம் அமெரிக்கா எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளது.

கடந்த 2015 டிசம்பரில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஐ.நா. மாநாட்டில் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்தது.

இந்நிலையில் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜூன் 1-ம் தேதி அறிவித்தார். இந்த நிலைப்பாட்டை ஐ.நா.விடம் அமெரிக்கா நேற்றுமுன்தினம் எழுத்துபூர்வமாக தெரிவித்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து 2019 நவம்பர் 4-ம் தேதி வரை எந்த நாடும் அதிகாரபூர்வமாக வெளியேற முடியாது. அதன்பிறகே ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும். அதற்கு ஓராண்டு காலம் வரை ஆகலாம். எனினும் 2020-ல் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு புதிய அதிபர் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவிக்கலாம் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x