Published : 01 Aug 2017 09:44 AM
Last Updated : 01 Aug 2017 09:44 AM

வெனிசூலா தேர்தலில்வன்முறை: 10 பேர் பலி

வெனிசூலாவில் நடந்த தேர்தலில் வன்முறை வெடித்தது. இதில் 10 பேர் பலியாகினர்.

வெனிசூலாவில் கடந்த 1999 முதல் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த 2013-ல் அப்போதைய அதிபர் சாவேஸ் காலமானதைத் தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோ புதிய அதிபராக பதவியேற்றார். அவரது அரசுக்கு எதிராக கடந்த ஏப்ரலில் கிளர்ச்சி ஏற்பட்டது. இதுவரை நடைபெற்ற போராட்டங்களில் 120-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதிபர் மதுரோ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதை ஏற்க மறுத்த மதுரோ, அரசியல் சாசனம் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்து கடும் அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சிகள், அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பது மூலம் பொதுத்தேர்தலை அதிபர் தள்ளிப் போடுகிறார் என்று குற்றம் சாட்டின.

இந்நிலையில் அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பது தொடர்பாக மக்களின் கருத்தறிய அரசு சார்பில் நேற்றுமுன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்து 10 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

தேர்தல் குறித்து அதிபர் நிக்கோலஸ் மதுரோ கூறியபோது, அரசியல் சாசனத்தை திருத்த பெரும்பான்மை மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதன்படி தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய அரசியல் சாசன அவை உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் முடிவுக்கு அமெரிக்கா, கனடா, பிரேசில், அர்ஜென்டினா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வெனிசூலா மீது புதிதாக பொருளாதார தடை விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x