

புளூ வேல் விளையாட்டின் தலைவராக இருந்து பலருக்கு கட்டளைகள் வழங்கிய ரஷ்யாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர்களின் உயிரைப் பலியாக்கி வரும் புளூ வேல் என்ற இந்த ஆபத்தான விளையாட்டு ரஷ்யாவில் 2013-ல் உருவாக்கப்பட்டது.
ஆன்லைனில் விளையாடும் இந்த விளையாட்டால் கடந்த 3 ஆண்டுகளில் ரஷ்யாவில் மட்டுமே 130 பேர் தற்கொலை செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சீனா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்த விளையாட்டு, தற்போது இந்தியாவிலும் விபரீதம் காட்ட ஆரம்பித்திருக்கிறது.
கடந்த இரு மாதங்களில் புளூ வேல் விளையாட்டின் காரணமாக தற்போது வரை இந்தியாவில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் கூறுகின்றன. மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் (19) இந்த விளையாட்டின் காரணமாக நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் புளூ வேல் விளையாட்டுக்கு தலைவராக இருந்து பலருக்கு கட்டளைகள் வழங்கிய ரஷ்யாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு கருதி அவரின் பெயரை போலீஸார் வெளியிடவில்லை.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது, "புளூ வேல் விளையாட்டை விளையாடிய இந்தச் சிறுமி அந்த விளையாட்டின் கடைசி டாஸ்கான தற்கொலை செய்து கொள்வது பற்றி தெரிந்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் சுதாரித்துக் கொண்ட அந்தச் சிறுமி இந்த விளையாட்டின் தலைவராக இருந்து டாஸ்க்குகளை வழங்குவதாக கூறி அதன்படி செயல்பட்டுள்ளார்.
அதன்படி இந்த விளையாட்டில் டாஸ்க்குகளை செய்ய தவறியவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை கொலை செய்து விடுவேன் என்று இந்தச் சிறுமி மிரட்டியுள்ளார்''என்று ரஷ்யா போலீஸார் தெரிவித்துள்ளனர்.