Published : 29 Aug 2017 10:12 AM
Last Updated : 29 Aug 2017 10:12 AM
வரும் செப்டம்பர் 9-ம் தேதி வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது என்று தென்கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அண்மையில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. சில நாட்களுக்கு முன்பு குறுகிய தொலைவு பாயும் 3 ஏவுகணைகளைச் சோதனை செய்தது.
இந்தப் பின்னணியில் வரும் 9-ம் தேதி மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் வடகொரியா செய்துள்ளது என்று தென்கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க உளவுத் துறை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. செயற்கைக்கோள் மூலமாக வடகொரியாவின் நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.
கடந்த 2006 அக்டோபரில் வடகொரியா முதல்முறையாக அணு ஆயுத சோதனையை நடத்தியது. அதன்பின் 2009, 2013, 2016 ஜனவரி, செப்டம்பரில் அடுத்தடுத்து அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. தற்போது 6-வது முறையாக அணுஆயுத சோதனை நடத்த தயாராகி வருகிறது.
இதனிடையே கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் வடகொரியாவின் முப்படைகள் தீவிர போர் ஒத்திகையிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த போர் பயிற்சிகளை அந்த நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT