

கடந்த 2008 டிசம்பரில் சீன அரசால் கைது செய்யப்பட்டவர் அந்த நாட்டைச் சேர்ந்த லியூ ஜியாபோ. பின்னர் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ‘லியூ ஓர் அரசியல் விமர்சகர், எழுத்தாளர், மனித உரிமைப் போராளி’ என்று குறிப்பிட்டாலே சிறை தண்டனைக்கான காரணம் விளங்கிவிடும்.
ஆனால் தனது முழு சிறை வாசத்தையும் அவர் அனுபவிப் பாரா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. காரணம் சீன அரசின் பெருந்தன்மை அல்ல. லியூ கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதுவும் அது முற்றிய நிலையில் உள்ளது.
லியூவின் மனைவி கதறியபடி சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு ஒளிநாடா சமீபத்தில் வெளியானது. அதில், “புற்று நோயால் அவதிப்படும் என் கணவருக்கு கதிரியக்க சிகிச்சை இல்லை. கீமோதெரபி அளிக்கப்படவில்லை. எனவே என் கணவர் சீனாவை விட்டு வெளியேற அனுமதி கோரு கிறார். சீனாவில் வாழ்வதை விட மேற்கத்திய நாட்டில் இறப்பதையே என் கணவர் விரும்புகிறார்” என்கிறார்.
வெளிநாட்டுக்குச் செல்வ தற்கு அவரது உடல்நிலை ஒத் துழைப்பதாக இல்லை என்கிறார்கள் சீன அதிகாரிகள். எனினும் லியூ மற்றும் அவரது மனைவிக்கு இதுகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்கிறார் கள் மனித உரிமை ஆர்வளர்கள்.
‘சீனாவில் நடைபெறும் மனித உரிமைப் போராட்டங்களின் முன்னணிக் குறியீடாக விளங்கு கிறார்’ என்ற குறிப்புடன் 2010-ம் ஆண்டு லியூவுக்கு அமைதிக் கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டது. ஆனால் அந்தப் பரிசை வாங்க சீன அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. அந்த நோபல் பரிசு வழங்கும் விழாவின் போது ஒரு காலி நாற்காலி அவர் சார்பில் வைக்கப்பட்டது.
ஆனால் லியூவை குற்றவாளி யாகக் கருதும் சீன அரசு, தனது நாட்டில் உள்ள கூகுள் இணையதளத்தில் லியூ குறித்த தகவல்களை வெளியிடத் தடை செய்தது. அவரைக் குறிக்கும் விதமாக ‘காலி நாற்காலி’ (empty chair) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி சிலர் கருத்து வெளியிட, சற்று தாமதமாக விழித்துக் கொண்ட அரசு அதை யும் தடை செய்தது. இப்போது லியூவின் வெளிநாட்டு பயணத் தையும் தடை செய்கிறது.
இதைக் கண்டிக்கும் வகை யில், ஹாங்காங்கில் உள்ள சீன அரசின் மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு எதிரே லியூவின் முகமூடி அணிந்தபடி பலரும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.