Published : 29 Jul 2017 09:50 AM
Last Updated : 29 Jul 2017 09:50 AM

விடுதலைப் புலிகளின் நிதி ஆதாரங்கள் முடக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

விடுதலைப் புலிகளின் நிதிஆதாரங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கையில் தனி நாடு கோரி போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் மீது கடந்த 2006-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது. கடந்த 2009-ம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று அந்த அமைப்பின் அரசியல் பிரிவு லக்ஸம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்க கடந்த 26-ம் தேதி உத்தரவிட்டது. எனினும் புலிகள் அமைப்பின் நிதிஆதாரங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2011 முதல் 2015 வரையிலான மதிப்பீடுகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. எனினும் 2015 முதல் 2017 வரையிலான காலப் பகுதியின் அடிப்படையில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட இயக்கமாகவே பட்டியலிடப்படும். அந்த அமைப்பின் நிதிஆதாரங்களை தொடர்ந்து முடக்கிவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக உள்ள 28 நாடுகளில் விடுதலைப் புலிகளின் நிதிஆதாரங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கும். நீதிமன்றத்தின் தீர்ப்பு உன்னிப்பாக ஆராயப்பட்டு தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் தடை உத்தரவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x