Published : 20 Jul 2017 09:22 AM
Last Updated : 20 Jul 2017 09:22 AM

எல்லையில் சீனா போர் பயிற்சி: இந்தியாவுக்கு எச்சரிக்கை

இந்தியா, சீனா இடையே எல்லை யில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிக்கிம் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை இந்தியா வாபஸ் பெற வேண்டும் என்று சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா பூடான் சீனா ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடம் சிக்கிம் மாநில எல்லையில் உள்ளது. டோக்லாம் என்ற பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அதை இந்தியாவும், பூடானும் கடுமையாக எதிர்த்தன. மேலும், சிக்கிம் எல்லையில் இந்தியா ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. பதிலுக்கு சீனாவும் ராணுவத்தைக் குவித்துள்ளது.

இந்நிலையில், எல்லையில் உள்ள படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று இந்தியாவை சீனா மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சீனா வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறும்போது, ‘‘இமயமலையில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்று நாங்கள் பலமுறை இந்தியாவிடம் கூறி விட்டோம். தற்போதுள்ள சூழ்நிலையை புரிந்துகொண்டு எல்லையை தாண்டி குவிக்கப் பட்டுள்ள படைகளை இந்தியா வாபஸ் பெறும் என்று நம்பு கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா ராணுவத்தினர் போர் பயிற்சியிலும் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து சீனா ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ‘‘கடந்த வாரம் எல்லையில் சீனா ராணு வத்தினர் ராக்கெட் லாஞ்சர்கள், இயந்திர துப்பாக்கிகள், வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். எதிரி நாட்டு விமானங்களை சுட்டு வீழ்த்தும் பயிற்சியிலும் ஈடுபட்டனர்’’ என்று தெரிவித்தது. ஆனால், எப்போது, எங்கு போர் பயிற்சியில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்படவில்லை.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வரும் 27-ம்தேதி சீனா செல்கிறார். அப்போது எல்லைப் பிரச்சினை குறித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x