Published : 25 Jul 2017 10:17 AM
Last Updated : 25 Jul 2017 10:17 AM

உலக மசாலா: கழுதைப்புலிகளுக்கு உணவு கொடுக்கும் அதிசய மனிதர்.

கழுதைப்புலிகளுக்கும் மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு பெரிதாக இருந்ததில்லை. எத்தியோப்பியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹரார் என்ற பழமையான நகரில் பல நூற்றாண்டுகளாக கழுதைப்புலிகளும் மனிதர்களும் நெருங்கிப் பழகி வருகிறார்கள்.

இங்கே மனிதரின் கையிலிருந்து உணவை வாங்கிச் சுவைக்கின்றன கழுதைப்புலிகள். 16-ம் நூற்றாண்டில் உருவானது இந்த நகரம். பாதுகாப்புக்காக நகரைச் சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டன.

ஆனால் கழுதைப்புலிகள் நகருக்கு வருவதற்காக சில இடங்களில் தாழ்வாக சுவர் கட்டப்பட்டன. நகருக்குள் கழுதைப்புலிகள் வந்தால், தேவையற்ற கழிவுகளை அவை சாப்பிட்டு, நகரை சுத்தம் செய்துவிடுகின்றன. அதனால்தான் இங்கே வசிக்கும் மக்கள் கழுதைப்புலிகளை அனுமதிக்கிறார்கள்.

“நகரை சுத்தம் செய்வதற்காக ஆண்டாண்டு காலமாக கழுதைப்புலிகள் இங்கே வந்து செல்கின்றன. சில நேரங்களில் கூட்டமாக வரும் கழுதைப்புலிகள் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகள், பறவைகளைத் தூக்கிக் கொண்டு சென்றுவிடுவது துண்டு. உணவு கிடைக்காதபோது மனிதர்களையும் தாக்க ஆரம்பித்தன. அப்போதுதான் என் அப்பா, கழுதைப்புலிகளுக்கு உணவு கொடுத்துவிட்டால் அவை மனிதர்களைத் தாக்கும் வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்தார். அவரே தினமும் இரவு இறைச்சியைக் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு இந்த 60 ஆண்டுகளில் கழுதைப்புலிகளால் மனிதர்களுக்கு சிறு அசம்பாவிதம்கூட நிகழ்ந்ததில்லை. 13 ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பாவிடமிருந்து இந்தப் பணியை நான் ஏற்றுக்கொண்டேன். எதிர்காலத்தில் என் மகனும் இந்த வேலையைச் செய்வான். இரவில் தனியாக இறைச்சியுடன் செல்வேன். சில நேரங்களில் 30 கழுதைப்புலிகள் கூட வந்துவிடுவதும் உண்டு. பொறுமையாக என் கைகளில் இருந்தே உணவை வாங்கிச் சாப்பிடுகின்றன. என் முகத்தோடு முகம் வைத்து உரசுகின்றன. தோளில் சாய்ந்துகொள்கின்றன. எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற பயம் எனக்கு சிறிதும் இல்லை. ஏனென்றால் அவை ஒருபோதும் என்னைப் பயமுறுத்தியதில்லை. நான் மட்டுமின்றி, நகரில் இருக்கும் மக்கள்கூட கழுதைப்புலிகளுக்குப் பயப்படமாட்டார்கள். நகருக்குள் இரவில் உலா வரும் கழுதைப்புலிகள் அசுத்தங்களைத் தின்றுவிட்டு, காட்டுக்குள் ஓடி விடுகின்றன. இப்படி கழுதைப்புலிகள் சுத்தம் செய்யாவிட்டால், இந்த நகரம் இன்னும் மோசமாக இருக்கும். இயற்கை சுத்தம் செய்வதற்காக அளிக்கப்பட்ட கொடை இவை. நகரைச் சுத்தம் செய்து, மனிதர்களுக்கு நோய் வராமல் காக்கும் கழுதைப்புலிகள் எங்களுக்கு சிறந்த நண்பர்கள். சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்ப்பதற்காகவே எங்கள் நகருக்கு வருகிறார்கள். அவர்களும் தைரியம் பெற்று உணவு கொடுக்கிறார்கள். கழுதைப்புலிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இதற்காக ஒருவருக்கு 280 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறேன். பொதுவாக சுற்றுலாப் பயணிகளைக் கழுதைப்புலிகளிடம் நெருங்க விடமாட்டேன். விலங்குகள் எந்த நேரம் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஹரார் பகுதியில் நான் மட்டுமே இப்போது உணவு கொடுக்கும் பணியைச் செய்து வருகிறேன்” என்கிறார் யூசுஃப் மியூம் சலே.

கழுதைப்புலிகளுக்கு உணவு கொடுக்கும் அதிசய மனிதர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x