Published : 10 Jul 2017 07:22 PM
Last Updated : 10 Jul 2017 07:22 PM
தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கத் தயாராக உள்ளோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
''காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இதனை மறைக்க எல்லையில் வேண்டுமென்றே இந்திய ராணுவம் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்திய ராணுவம் 450 முறை சண்டை நிறுத்தத்தை மீறியுள்ளது. இதில் அப்பாவி மக்கள் பலர் பலியாகி உள்ளனர்.
தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண விரும்புகிறோம்.
அதேநேரம் காஷ்மீர் மக்களின் போராட்டங்களுக்கு அரசியல், ராஜ்ஜியரீதியில் ஆதரவு அளிப்போம். காஷ்மீரின் சுதந்திரப் போராட்டத்தை இந்தியாவால் அடக்க முடியாது. அந்தப் பகுதி மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்கப்பட வேண்டும்.
இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சுயநிர்ணய உரிமை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதேபோன்ற வாக்கெடுப்பு காஷ்மீரில் நடத்தப்பட வேண்டும்'' என்று சர்தாஜ் ஆசிஷ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT