

ஜி 20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் முதல்முறையாக சந்தித்துப் பேச உள்ளனர்.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, மெக்ஸிகோ, ஜப்பான், இத்தாலி, இந்தோனேசியா, இந்தியா, பிரான்ஸ், சீனா, கனடா, பிரேசில், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் உச்சி மாநாடு வரும் 7, 8-ம் தேதிகளில் ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் முதல்முறையாக சந்தித்துப் பேச உள்ளனர்.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியபோது, ஜூலை 7-ம் தேதி அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் சந்தித்துப் பேச உள்ளனர். அப்போது சிரியா, உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றார்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றார். அதன்பிறகு இதுவரை 4 முறை ட்ரம்பும் புதினும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் உக்ரைன் விவகாரத்தால் அமெரிக்கா, ரஷ்யா உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. ரஷ்யா மீது பல்வேறு பொருளா தார தடைகளை அமெரிக்கா விதித்தது.
அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ரஷ்யாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கவில்லை. எனினும் சிரியா விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே கசப்புணர்வு நீடிக்கிறது. இந்தப் பின்னணியில் இருநாட்டு அதிபர்கள் சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.