Published : 19 Jan 2014 12:10 PM
Last Updated : 19 Jan 2014 12:10 PM

தேவயானி மனுவுக்கு பதிலளிக்க ஜன.31 வரை அவகாசம்

விசா மோசடி வழக்கை ரத்துசெய்யக் கோரி இந்திய துணைத்தூதர் தேவயானி கோப்ரகடே தாக்கல்செய்த மனுவுக்கு பதில் அளிக்க அமெரிக்க அரசுக்கு ஜனவரி 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றிய தேவயானி தனது பணிப் பெண்ணுக்கு விசா பெற்றபோது தவறான தகவல் களை அளித்ததாக குற்றம் சாட்டி டிசம்பர்

12-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் ரூ.1.5 கோடி பிணைத் தொகையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும் அமெரிக் காவுக்கும் இடையே பனிப்போர் நீடித்த நிலையில் தேவயானியை அமெரிக்க அரசு நாட்டைவிட்டு வெளியேற்றியது. இதற்குப் பதிலடியாக டெல்லியில் பணியாற்றிய அமெரிக்க துணைத் தூதரை இந்திய அரசு வெளியேற்றியது.

இந்நிலையில் தன் மீதான விசா மோசடி வழக்கை ரத்து செய்யுமாறு தேவயானி சார்பில் நியூயார்க் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த மனு குறித்து பதில் அளிக்க ஜனவரி 31-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா நீதிமன்றத்தில் கோரினார்.

இதற்கு தேவயானியின் வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கமான நடைமுறைகளின்படி 14 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்க வேண்டும்; அதன்படி ஜனவரி 28-க்குள் அமெரிக்க அரசு பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சிலிண்டின், ஜனவரி 31-ம் தேதி வரை பிரீத் பராராவுக்கு காலஅவகாசம் வழங்கி உத்தர விட்டார். அரசுத் தரப்பு பதிலுக்கு தேவயானி பிப்ரவரி 7-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x