Published : 06 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jan 2014 12:00 AM

தாய்லாந்தில் 7.5 கி.மீ. நீளத்துக்கு அரசு எதிர்ப்பாளர்கள் பேரணி

தாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக் கோரி அரசு எதிர்ப்பாளர்கள் தலைநகர் பாங்காக்கில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். அப்போது, அடுத்த வாரம் நடைபெற உள்ள முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர்.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுதிப் தவுக்சுபன் தலைமையில், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் ஜனநாயக நினைவுச் சின்னத்திலிருந்து தொடங்கிய பேரணி சுமார் 7.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீடித்தது. இடைக்கால அமைச்சரவை முழுவதும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி பாங்காக்கில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த அரசு எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 20 முக்கிய சாலை சந்திப்புகளில் போராட்டம் நடைபெறும்.

அன்றையதினம் அங்கு உள்ள அரசு அலுவலகங்களுக்குள் அலுவலர்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். மேலும், அரசு கட்டிடங்களுக்கு நீர் மற்றும் மின்சார இணைப்பை துண்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில்தான் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இதுபோன்ற பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக பொதுமக்களின் ஜனநாயக மறுசீரமைப்புக் குழு (பிடிஆர்சி) செய்தித் தொடர்பாளர் அகனத் பிராம்பென் தெரிவித்தார்.

இதற்கிடையே, அரசு எதிர்ப்பாளர்களின் முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என அமைதி மற்றும் ஒழுங்கு நிர்வாக மையத்தின் பொறுப்பாளரும் இடைக்கால அரசின் துணைப் பிரதமருமான சுரபங் டொவிச்சுக்சைகுல் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இடைக்கால அமைச்சரவை பதவி விலகினால் அது சட்டத்தை மீறியதாகி விடும். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் சுரபங் தெரிவித்தார்.

கடந்த 2011-ல் பிரதமரான யிங்லக், தனது சகோதரரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நாட்டை விட்டு வெளியேறி துபாயில் வசித்து வருபவருமான தக்ஷின் ஷினவத்ராவின் கைப்பாவையாக செயல்படுவதாகக் கூறி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்த யிங்லக், இடைக்கால அரசை அமைத்து அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். ஆனால், யிங்லக் பதவி விலகி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, மக்கள் கவுன்சிலின் கீழ் தேர்தல் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x