Published : 21 Jan 2014 10:54 AM
Last Updated : 21 Jan 2014 10:54 AM

போலீஸாருடன் மோதல்: வங்கதேச ஜமாத் நிர்வாகி சுட்டுக்கொலை

வங்கதேசத்தில் பழமைவாத ஜமாத் இ- இஸ்லாமி கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவர், பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்.

தாரிக் முகமது சைபுல் இஸ்லாம் (35) என்ற இவர் ஜமாத் கட்சியின் மெஹர்பூர் மாவட்ட பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த ஜனவரி 5ம் தேதி பொதுத் தேர்தலையொட்டி, மக்களை வன்முறைக்குத் தூண்டியது, போலீஸாரை தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இவரை போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில், மெஹர்பூர் மாவட்ட கிராமம் ஒன்றில் தனது கட்சியினர் சதியாலோசனையில் ஈடுபட்டு வருவதாக சைபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு படையினர் மறைவிடத்தை சுற்றி வளைத்தபோது, அவர்களை நோக்கி ஜமாத் அமைப்பினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் போலீஸ் பிடியில் இருந்து சைபுல் இஸ்லாம் தப்ப முயன்றபோது, துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு இறந்தார்.

வங்க தேசத்தின் வடமேற்குப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜமாத் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட அடுத்த 2 நாள்களில் சைபுல் இஸ்லாம் கொல்லப்பட்டுள்ளார். வங்கதேச தேசிய கட்சியின் (பி.என்.பி) கூட்டணிக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமி தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இத்தடை விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x