Published : 08 Mar 2014 11:42 AM
Last Updated : 08 Mar 2014 11:42 AM

தேசத் துரோக வழக்கை ராணுவ நீதிமன்றத்துக்கு மாற்ற முடியாது: முஷாரப் கோரிக்கை நிராகரிப்பு

தம் மீதான தேசத்துரோக வழக்கு விசாரணையை ராணுவ நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் (70) கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிபதிகள் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் ராணுவ சட்டத்தின் கீழ் இயங்கும் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்றும் முஷாரப் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி பைசல் அராப், முஷாரப்பின் மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை என தெரிவித்ததுடன், அவரது அனைத்து கோரிக்கைகளையும் நிராகரிப்பதாக தெரிவித்தார். பின்னர் விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் முஷாரப் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அடுத்த விசாரணையின்போது முஷாரப் ஆஜராகவில்லை என் றால், அவருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது வாரன்ட் பிறப் பிக்குமாறு கோருவோம் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கிடையே, நீதிபதிகளை சிறையிலடைத்தது தொடர்பாக முஷாரப் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு தீவிரவாத தடுப்பு நீதி மன்றத்தில்வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால், முஷாரப்பின் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் விசாரணையை 21-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இதைக் கண்டித்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தை புறக்கணித்தனர். இதனால் முஷாரப் தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை.

கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ் தானில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து, தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை கைது செய்யுமாறு அப்போது அதிபராக இருந்த முஷாரப் உத்தரவிட்டார்.

இதுகுறித்து, சவுத்ரி முகமது அஸ்லம் கும்மன் கடந்த 2009-ம் ஆண்டு முஷாரப் மீது புகார் செய்ததையடுத்து, வழக்கு தொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே நீதிமன்ற வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷாரப்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x