காஷ்மீர் பிரச்சினையில் தலையீடு இல்லை: அமெரிக்கா உறுதி

காஷ்மீர் பிரச்சினையில் தலையீடு இல்லை: அமெரிக்கா உறுதி

Published on

காஷ்மீர் கலவரம் இந்தியாவின் உள்விவகாரம், அதில் தலையிடமாட்டோம் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

காஷ்மீரில் கலவரம் தொடர்பான தகவல்கள் கவலை அளிக்கின்றன. அனைத்து தரப்பினரும் அமைதியை ஏற்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். காஷ்மீர் கலவரம் இந்தியாவின் உள்விவகாரம். அதில் ஒருபோதும் தலையிடமாட்டோம். இதுதொடர்பாக இந்திய அரசிடம் நாங்கள் எதுவும் பேசவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்: ஐநா கவலை

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் கலவரத்தில் பலர் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது. வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே சூடான் உள்நாட்டுப் போர் குறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானி துஜாரிக் நேற்று நியூயார்க்கில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த நிருபர் ஒருவர், காஷ்மீர் கலவரம் குறித்து ஐ.நா.வின் நிலை என்ன கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஸ்டீபானி அளித்த பதில் வருமாறு:

காஷ்மீர் நிலவரம் குறித்து கவலையடைந்துள்ளோம். எனினும் அது மிகப்பெரிய பிரச்சினை அல்ல. அதைவிட மோசமான உள்நாட்டுப் போர்கள் உலகின் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. அவற்றை தடுத்து நிறுத்தவே ஐ.நா. சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in