இராக்கில் வன்முறை: 73 பேர் பலி

இராக்கில் வன்முறை: 73 பேர் பலி
Updated on
1 min read

இராக்கில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் 2 பத்திரிகையாளர்கள் உள்பட 73 பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் பாக்தாதின் வடக்கில் அதாமியா என்ற இடத்துக்கருகே ஒரு மசூதி உள்ளது. அங்கு 9-வது ஷியா இமாம் முகமது அல்-ஜவாதுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கானோர் சனிக்கிழமை கூடினர். அப்போது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 49 யாத்ரிகர்கள் இறந்தனர். 75 பேர் காயமடைந்தனர். தற்கொலைப்படை தாக்குதலுக்குப் பிறகு குண்டுவெடிப்பும் நிகழ்ந்ததா அல்லது தற்கொலைப்படை தாக்குதல் மட்டுமே நடத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.

இதுதவிர, மொசுல் நகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர் முகமது கரீம் அல்-பத்ரனி மற்றும் புகைப்பட கலைஞர் முகமது கானெம் ஆகிய 2 பேர் கொல்லப்பட்டதாக ஷர்கியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

பலாட் நகரில் உள்ள ஒரு உணவகம் மீது தற்கொலைப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 12 பேர் இறந்தனர். 35 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இராக்கில் புகழ்பெற்ற ஷியா பிரிவினரின் புனிதத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in