Last Updated : 27 Nov, 2014 09:04 AM

 

Published : 27 Nov 2014 09:04 AM
Last Updated : 27 Nov 2014 09:04 AM

தமிழக மீனவர்கள் விடுதலை விவகாரம்: ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி நன்றி

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ததற்காக அதிபர் ராஜபக்சவுக்கு, இந்திய பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

சார்க் அமைப்பு மாநாட்டில் பங்கேற்க நேபாளத் தலைநகர் காத்மாண்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் ராஜபக்ச சந்தித்துப் பேசினார். அப்போது, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததற்காக ராஜபக்சவுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மோடி உங்களுக்கு நன்றி தெரிவித் தாரா என்று ராஜபக்சவிடம் பிடிஐ செய்தியாளர் கேட்டபோது, “நான் மோடியிடம் பேசும்போது, அவரின் வெளியுறவுக் கொள்கைக்குத்தான் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். அதனால்தான் மீனவர்களின் விடுதலை சாத்தியமானது என்று தெரிவித்தேன்.

இந்தியாவுக்கும், இலங்கைக் கும் இடையேயான நட்புறவு சிறப்பாக உள்ளது. சார்க் நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் செயற்கைக்கோளை ஏவ இந்தியா முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது” என்றார்.

முன்னதாக மாநாட்டில் பேசிய மோடி, இலங்கையில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ராஜபக்சவுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோரை தனித்தனியே சந்தித்த பிரதமர் மோடி, பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக அவர்களுடன் பேச்சு நடத்தினார்.

மோடி நவாஸ் சந்திப்பு இல்லை

மாநாட்டு மேடையில் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தபோதும், நரேந்திர மோடியும், நவாஸ் ஷெரீப்பும் பேசிக்கொள்ளவில்லை.

மேடையில் நவாஸுக்கும், மோடிக்கும் இடையே மாலத்தீவு மற்றும் நேபாளத் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். மாநாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இருவரும் ஒருமுறைகூட ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

நவாஸ் உரையாற்றச் சென்ற போதும், திரும்பி வந்தபோதும் மோடியின் இருக்கையை கடந்து சென்றார். ஆனால், அவரை பார்த்து வணக்கம் தெரிவிக்கவில்லை. இருவரும் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தனர்.

இதனிடையே, இந்திய வெளியுற வுத் துறைச் செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறியதாவது: மோடியும், நவாஸ் ஷெரீப்பும் சந்தித் துப் பேசுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அது தொடர்பான கோரிக்கை எதுவும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து வரவில்லை. அதே சமயம், மாநாட் டுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான், இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம், பூடான் உள்ளிட்ட மற்ற நாடுகளின் தலைவர்களுடன் மோடி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அக்பருதீன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x